கும்பகோணம், பிப்.26 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற நாச்சியார்கோயில் பித்தளை குத்துவிளக்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு தயார் செய்யப்படும் பித்தளை குத்துவிளக்கு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தயார் செய்யப்படும் விளக்குகள் முக்கிய அரசு அலுவலகங்கள் விடுதிகளில் வரவேற்பரையில் முன்னின்று காட்சியளிக்கிறது. இத்தொழிலில் சுமார் 500 பட்டறைகளில், 3000 நபருக்கு மேல் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் அன்றாட கூலி வலை செய்து, அதில் வரும் குறைந்தபட்ச வருமானத்தை வைத்து, தனது பிள்ளைகள் படிப்பு செலவு மற்றும் மருத்துவ செலவு, அன்றாட உணவு செலவுகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடுமையான விலைவாசி உயர்வால் தொழிலாளர்கள் அன்றாடம் ஜீவனம் நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இது சம்பந்தமாக நாச்சியார்கோயில் பித்தளை குத்துவிளக்கு வியாபாரிகள் சங்கத்திடம், தங்களுக்கு வழங்கப்படும் குத்துவிளக்கிற்கு 80 சதவீத கூலி உயர்வு வேண்டும் என கடந்த மாதம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நாச்சியார்கோவில் குத்துவிளக்கு வியாபாரிகள் சங்கம் அதை நிராகரித்து, 7% மட்டுமே கூலி உயர்வு தரப்படும் என அறிவித்தது. இதனை ஏற்றுக் கொள்ளாத குத்துவிளக்கு உற்பத்தி தொழிலாளர்கள் 80 சதவீத கூலி உயர்வு வேண்டுமென வலியுறுத்தி, கூலி உயர்வு பெறும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து, கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன் பிறகு இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தை உடன்படாததால் தொடர் வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்நிலையில் நாச்சியார்கோயில் பகுதி அனைத்து அரசியல் கட்சியினர், வர்த்தக சங்கத்தினர், சமூகநல ஆர்வலர்கள் தொழிலாளர்களின் கூலி உயர்வு பிரச்சனையில் தலையிட்டு குத்துவிளக்கு வியாபாரிகளுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான கூலி உயர்வுக்கு தீர்வு காணப்பட்டது. இதனால் குத்துவிளக்கு தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.