தஞ்சாவூர், ஜூன் 10 - தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் செந்தில்வேல் (66). இவர் கரந்தை கடைவீதியில் கடை வைத்துள்ளார். வர்த்தக சங்க பொருளாளராகவும் உள்ளார். வியாழக்கிழமை மாலை இவரது கடைக்கு போதையில் கும்பலாக வந்த சிலர் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் பணம் கொடுக்க முடியாது என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் செந்தில்வேலை அரிவாளால் வெட்டி விட்டு பணத்தை பறித்து கொண்டு சென்றது. இதில் படுகாயம் அடைந்த செந்தில்வேல் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அந்த கும்பல் கடைவீதியில் உள்ள ஒவ்வொரு கடைக்கும் சென்று அரிவாளை காட்டி மிரட்டி வியாபாரிகளிடம் பணம் பறித்தது. இந்த சம்பவங்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன்(29), தினேஷ் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், சிலரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் வியாபாரி செந்தில்வேல் தாக்கப்பட்டதை கண்டித்தும், பணம் பறிப்பு சம்பவத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் கரந்தையில் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். தொடர்ந்து வர்த்தக சங்க தலைவர் முருகானந்தம், செயலாளர் ரங்கராஜன் தலைமையில் ஏராளமான வியாபாரிகள் கடைவீதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.