districts

பொறியியல் படிக்க பிடிக்கவில்லை நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி

தஞ்சாவூர், ஆக. 18 -
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சிலம்பவேளாங்காடு பகுதியைச் சேர்ந்தோர் செந்தில்குமார்–சாந்தி தம்பதியினர். இருவரும் கூலித் தொழிலாளி. இவர்களின் இரண்டாவது மகன் தனுஷ் (20) கடந்த 2022 ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார்.

அப்போது, தனுஷ் மருத்துவம் படிக்க விரும்பிய நிலையில், அவரது பெற்றோர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பாடப்பிரிவில் சேர்த்து விட்டனர். பொறியியல் படிக்க பிடிக்காத  தனுஷ் ஒரு மாதத்தில் கல்லூரியை விட்டு ஊருக்கு வந்துவிட்டார்.

பிறகு, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு வீட்டில் இருந்தபடி, நீட் தேர்வுக்கு தயாராகி தேர்வு எழுதினார். ஆனால் தேர்வில் தோல்வியை சந்தித்தார். இந்தாண்டு நடந்த நீட் தேர்வை தனுஷ் எழுதவில்லை. இதையடுத்து தனுஷின் பெற்றோர், “இரண்டு ஆண்டுகளை வீணாக்கி விட்டாய், மருத்துவம் படிக்க வேண்டாம், பொறியியல் படிக்கச் செல்” என திட்டியுள்ளனர். இந்நிலையில், பொறியியல் படிப்பில் சேர்ப்பதற்காக மீண்டும் விண்ணப்பித்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த தனுஷ் வெள்ளிக்கிழமை பெற்றோர் இல்லாத போது, வீட்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த மதுக்கூர் காவல்துறையினர் இறந்த தனுஷின் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.