தஞ்சாவூர், அக்.10 - தீக்கதிர் செய்தி எதிரொலியாக வழுதலைவட்டம் கிராமத்தில், மயானச் சாலை அமைக்க ரூ.23.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு ஊராட்சி, வழுதலைவட்டம் கிராமத்தில் மயானக் கரைக்கு செல்லும் சாலை, மண் சாலையாக இருப்பதால், மழைக்காலங்களில் சடலத்தை எடுத்துச் செல்வதில் இப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்தனர். இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை விரிவான செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில், அதிகாரிகள் அந்த இடத்தில் ஞாயிறன்று ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளித்தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழுதலை வட்டம் கிராமத்தில் மயானச் சாலையை ஓரடுக்கு கப்பிச் சாலையாக சீரமைப்பதற்கு ரூ.23,00,049 ஆயிரம் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். சாலை அமைக்கப் பரிந்துரை செய்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், நிதி ஒதுக்கீடு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கு வழுதலைவட்டம் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.