தஞ்சாவூர், ஜூலை 9- தங்களின் சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வரும் கிராமக் கமிட்டி மற்றும் கைஃபா தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளுக்கு, பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் பாராட்டு தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆவணம் - பெரியநாயகிபுரம் ஊராட்சியில், புதுக்குளம் என்ற ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 62 ஏக்கர் பரப்பம், 3.2 கிலோ மீட்டர் சுற்றளவும் கொண்டது. இந்த புதுக்குளம் ஏரி மூலம் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்த நிலையில், பல ஆண்டுகளாக புதுக்குளம் ஏரி தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால், மண் மேடிட்ட நிலையில் கருவேல மரங்கள் வளர்ந்தும், முட்புதர்கள் மண்டியும், காடு போல் காணப்பட்டது. இதனால் ஏரியில் ஒரு சொட்டு நீரைக்கூட தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இந்த ஏரியை தூர்வாரி மீட்டெடுக்க கிராமத்தினர் முடிவு செய்து, தங்கள் சொந்த செலவில், கைஃபா என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் களப் பணியில் இறங்கினர். கடந்த ஒரு மாதமாக இரண்டு ஜேசிபி மற்றும் ஒரு செயின் டோசர் இயந்திரத்தின் உதவியுடன் முட்புதர்கள், மரங்கள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடை பெற்று வருகிறது. இந்நிலையில் ஏரி தூர் வாரும் பணியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர்களிடம் பேசிய எம்எல்ஏ என்.அசோக்குமார், “தன்னார்வலர்களாக எவரையும் எதிர்பார்க்காமல், ஏரியை தூர்வாரும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் கிராமக் கமிட்டி - கைஃபா அமைப்பை பாராட்டுவதாக” தெரிவித்தார். தூர்வாரும் பணி முழுமை பெற்றதும், ஏரிக்கு நீர் நிரப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது குறித்து, உரிய அதிகாரிகளிடம் பேசி நட வடிக்கை எடுக்கப்பதாக எம்எல்ஏ கூறினார்.