தஞ்சாவூர், நவ.5- தமிழ்நாடு அரசு புள்ளி இயல் சார்நிலை அலுவலர் சங்கத்தின் 4 ஆவது மாநில பிரதிநிதித்துவ பேரவை தஞ்சாவூர் லாலி ஹாலில் சனிக்கிழமை நடந்தது. மாநிலத் தலைவர் ப.அந்துவன்சேரல் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சு.கண்ணன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாநில துணைத் தலைவர் செல்வராணி துவக்க உரையாற்றினார். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள், கோட்டங்கள் மற்றும் வட்டாரங்களுக்கு புதிய பணியிடங்களை உருவாக்கி அலுவலகங்கள் ஏற்படுத்தி தர வேண்டும். கோட்ட புள்ளி இயல் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு வாகனங்கள் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பு பணி மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு பொறுப்புபடி வழங்க வேண்டும். புள்ளியியல் துணை இயக்குநர் பதவி உயர்வுக்கு விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். திட்டப்பணிகளை திறம்பட மேற்கொள்ள வசதியாக தரம் மிக்க கணினி அல்லது கையடக்க கணினி உபகரணங்களை வழங்க வேண்டும். துறையின் அனைத்து திட்டப்பணிகளும், கணினி வாயிலாகவே நடைபெறுவதால் துறைத் தலைமை இடத்தில் தரவுகளை கையாளும் வகையில் மையம் ஏற்படுத்த வேண்டும். பயிர் அறுவடை பரிசோதனைகள் மேற்கொள்ள வழங்கப்பட்ட எடை கருவிகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், புதிய மின் சேமிப்புக் கலன் (டிஜிட்டல்) எடைக் கருவி வழங்க வேண்டும். காலியாக உள்ள சார்நிலை பணியிடங்கள், அமைச்சுப் பணியிடங்கள் மற்றும் காவலர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.