districts

img

அரியலூர் மாணவியின் பெற்றோர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி மாணவியின் தந்தை, சித்தி ஆகியோர் தஞ்சை நீதித்துறை நடுவர் முன் ஞாயிற்றுக்கிழமை காலை ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்த வாக்குமூலம் இரண்டரை மணி நேரம் நடந்தது.

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி கனிமொழி. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முருகானந்தம் சரண்யா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியின் மகள் லாவண்யா, தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ஒரு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு முதல் சேர்ந்து படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கியிருந்த அவர் தற்போது பிளஸ் 2 படித்து வந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி பூச்சிமருந்தை குடித்துள்ளார். விடுதி நிர்வாகம் முருகானந்தத்திற்கு தகவல் தெரிவித்து அவர் வந்து தனது மகளை ஊருக்கு அழைத்து சென்றார்.

பின்னர் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 15 ஆம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்ட மாணவி தான் பூச்சிமருந்தை குடித்ததையும், விடுதியில் தன்னை அடிக்கடி வேலை வாங்கியதால் மனஉளைச்சல் ஏற்பட்டு இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். 

கடந்த 19 ஆம் தேதி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விடுதி வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து மாணவியை மதமாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் முயற்சித்ததுதான் மாணவி தற்கொலைக்கு காரணம் என கூறி பாஜகவினரும், மாணவியின் பெற்றோரும் தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளித்தனர். விசாரணைக்குப் பிறகு இதனை தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா கந்தபுனேனி மறுத்தார்

இதனிடையே மாணவி மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில் என்னை விடுதி வார்டன் பில்களை கணக்கு எழுத வேண்டும் என்று மீண்டும் டார்ச்சர் செய்தார்.  விடுமுறைகளுக்கு வீட்டிற்கு அனுப்பமாட்டார். என்னை திட்டிக்கொண்டே இருப்பார். இதனால் தான் நான் மருந்து சாப்பிட்டு விட்டேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு ஏதுமில்லை" என்று கூறியுள்ளார்.

மாணவி உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்த நிலையில், சனிக்கிழமை உடலை பெற்றுக்கொண்டு அடக்கம் செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

மேலும் மாணவியின் தந்தை, தாய் தஞ்சை நீதித்துறை நடுவர் முன் ஞாயிற்றுக்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது. 

இதன் பேரில் ஞாயிறு காலை 11.55 மணியளவில் தஞ்சை 3வது குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதி முன்பாக மாணவியின் பெற்றோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். மதியம் 2.30 மணிவரை பெற்றோரிடம் தனித்தனியாக நீதிபதி வாக்குமூலம் பெற்றார். இந்த வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வீடியோ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒப்படைக்கப்படும் என்று நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாக்குமூலம் கொடுத்த மாணவியின் பெற்றோரை அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் அய்யப்பன் தலைமையில் வந்திருந்த நிர்வாகிகள் காரில் அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.