தஞ்சாவூர், மே 16 - தஞ்சாவூர் மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் உற்பத்தியை அதிகரித்தால் விற்பனையின்றி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் தேங்காய் தரம் காரணமாக உலகளவில் சிறப்பு பெற்றது. பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை போன்ற நாடுகளும், இந்தியாவில் கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகமும் தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. தஞ்சாவூரில் நெல்லுக்கு அடுத்தபடியாக டெல்டா விவசாயிகளின் 2 ஆவது மிகப்பெரிய வாழ்வாதாரமாக விளங்கிவரும் தென்னை சுமார் 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம், பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதியில் விளையும் தேங்காய்கள் அதன் அளவு, சுவை, மணம் போன்றவைகள் மூலம் பெயர் பெற்றுள்ளன. இதன் காரணமாக, உலகளவில் சிறப்பு பெற்ற இப்பகுதி தேங்காய்கள், புகழ்பெற்ற பிஸ்கட் கம்பெனிகள், எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விருப்பமாக உள்ளன. இப்படி பெயர் பெற்ற தேங்காய் வருமானம், கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலால் சேதுபாவாசத்திரம் பகுதியில் மட்டும் 1.50 லட்சம் தென்னைகளை இழந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வருவாயின்றி விவசாயிகள் தடுமாறி வந்தனர்.
தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தி அதிகரிக்க தொடங்கி, இழப்பில் இருந்து மீண்டு வந்தனர். இந்நிலையில் கேரளா போன்ற வெளி மாநிலங்களிலும், பொள்ளாச்சி போன்ற வெளி மாவட்டங்களிலும் இதேபோல் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதியிலிருந்து ஏற்றுமதி நின்று விட்டது. எனவே, வாங்கிய தேங்காயை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகளும், உற்பத்தியான தேங்காயை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகளும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 20 ரூபாயாக குறைந்தது. ஆனால், தற்போது விற்பனையின்றி விலை சரிந்து 10 ரூபாய் முதல் 11 ரூபாயாக உள்ளது. இதனால் வெட்டிய தேங்காய்களை விற்பனை செய்ய முடியாமல் தோப்புகளிலும், தேங்காய் வெட்ட முடியாமல் மரங்களிலும் கிடக்கின்றன. இதனால் தென்னை விவசாயிகள் மட்டுமின்றி, தேங்காய் உரிக்கும் தொழிலாளிகள், தேங்காய் வெட்டும் தொழிலாளிகள், கொப்பரை காய வைப்போர் உட்பட பலரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி செய்வதறியாது உள்ளனர்.
தென்னை விவசாயிகள் கோரிக்கை
இதுகுறித்து தென்னை விவசாயி ஆவணம் க.அடைக்கலம் கூறுகையில், “தேங்காய் விலை ஒரேயடியாக 10 ரூபாய்க்கு வீழ்ச்சியடைந்துள்ளது. 100 தேங்காய்க்கு லாபக்காய் என 8 தேங்காயையும் வியாபாரிகள் கூடுதலாக வாங்கிக் கொள்கின்றனர். கடைசியில் விவசாயிகளுக்கு ஒரு தேங்காய்க்கு 9 ரூபாய்தான் கிடைக்கிறது. மொத்த வியாபாரிகள், ஆயில், சோப் உற்பத்தி நிறுவனங்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, விலையைக் குறைத்து நிர்ணயித்து, தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் செய்து விடுகின்றனர். ஒரு தேங்காயின் உற்பத்தி செலவே ரூ.7 வரை ஆகிறது. அரசும் நெல்லுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்வது போல தேங்காய்க்கும் உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசு தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க, அரசே கொள்முதல் செய்கிறது. மேலும், விவசாயிகளுக்கும் ஆதார விலையை உயர்த்தி தருகிறது. அதேபோல் தமிழக அரசும் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும். மேலும், கொப்பரைத் தேங்காயை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம், கூடுதலாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல், கரும்புக்கு தருவது போல, தென்னைக்கும் அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பட்டுக்கோட்டையில் உள்ள தென்னை வணிக வளாகம் முறையாக செயல்படாமல் உள்ளது. தற்போது திமுக அரசு அமைந்த பிறகு, உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர். பேராவூரணி - பட்டுக்கோட்டை பகுதியை மையமாக வைத்து, தென்னை சார்ந்த நவீன தொழிற்சாலைகளை உருவாக்கி, தேங்காய் பால், தேங்காய் துருவல், தேங்காய் பருப்பு, தேங்காய் எண்ணெய், சோப், தேங்காய் சிரட்டையில் இருந்து கார்பன் தயாரிப்பு, மிதியடி, கலைப்பொருட்கள் போன்ற காயர் உற்பத்தி பொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்த வேண்டும். ஜவுளி பூங்கா போல, தென்னை பூங்கா அமைத்து தென்னை விவசாயத்தை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். இப்பகுதி முன்னோடி தென்னை விவசாயிகளை அழைத்து அரசு ஆலோசனை பெற வேண்டும்” என்றார்.
எம்.எல்.ஏ என்.அசோக்குமார்
“கொப்பரைத் தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு ரூ.125 வழங்க வேண்டும். கஜா புயல் காரணமாக தென்னை விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னையை நம்பித்தான் இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் உள்ளது. பட்டுக்கோட்டையில் கொப்பரை கொள்முதல் நிலையத்தில் போதிய அளவு கொள்முதல் செய்யப்படவில்லை. பேராவூரணி பகுதிக்கு புதிதாக கொப்பரை கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும். விவசாயிகளிடமிருந்து அதிக அளவு கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்” என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் கோரிக்கை வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல்வர் பாதுகாப்பாரா...?
காவிரி டெல்டா மாவட்டங்களில், விவசாயத்தைப் பாதுகாக்க சிறப்புக் கவனம் செலுத்தி வரும் தமிழக முதலமைச்சர், அதிக வருவாய், அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் தென்னை விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பாரா...?