districts

சிறுபான்மையினத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன் உதவி

தஞ்சாவூர், டிச.11-  சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தற்போது கடன் பெறும் பயனாளிகளுக்கான ஆண்டு வருமானம், கடன் தொகை, வட்டி விகிதம் ஆகியவற்றில் அரசு சில தளர்வுகளை நடைமுறைப்படுத்தி, பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகை செய்துள்ளது.  இதன்படி கைவினைக் கலைஞர்களுக்கான கடன் திட்டம் - 1 ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாக இருப்பின் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம், கிராமப்புறமாக இருப்பின் ரூ. 98 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  ஆண்களுக்கு 5, பெண்களுக்கு 4 விழுக்காடு வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்-2ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்களுக்கு 6, பெண்களுக்கு 5 விழுக்காடு வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. எனவே, தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் சிறுபான்மையினர் கடன் விண்ணப்பங்களை பெற்று அதை பூர்த்தி செய்து, அவற்றுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை,  வருமானச் சான்று, உணவு பங்கீட்டு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.  மேலும், தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டார் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அல்லது தொலைபேசி எண் : 04362-278416 அல்லது dbcwo. tntnj@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.