districts

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் திறக்கப்படுமா?

தஞ்சாவூர், மே 29 -  சென்னைக்கு உடனடியாக விரைவு ரயில் இயக்கவும், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு முன்பதிவுக் கூடம் அமைக்கவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.  மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெயினுலாபுதீன், மாவட்டத் தலைவர் மதுக்கூர் அப்துல் காதர், அதிராம்பட்டினம் செயலாளர் கே.கே.ஹாஜா நஜ்முதீன், தலைவர் வழக்குரைஞர் முனாஃப், நிர்வாகி சாகுல் ஹமீது ஆகியோர் தென்னக ரயில்வே உயர் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை  மனுவில், “காரைக்குடி - திருவாரூர் வழியாக சென்னைக்கு இருமுனைகளில் இருந்தும் உடனடியாக விரைவு ரயில் இயக்க வேண்டும். அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் ஒருங்கிணைந்த பயணச் சீட்டு முன்பதிவு கூடம் அமைக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.  இதனிடையே  ஜூன் மாதம் 4 ஆம் தேதி எர்ணாகுளம் முதல் வேளாங்கண்ணி வரை வாரம் ஒருமுறை விரைவு ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து குற்றாலம், கேரளா செல்லும் அதிகமான அதிராம்பட்டினம் ரயில் பயணிகள், பயணச்சீட்டுக்காக ஆர்வத்துடன் ஆன்லைன் மூலமும், அருகிலுள்ள பட்டுக்கோட்டை ரயில் நிலையத்திலும் முன்பதிவு செய்து வருகின்றனர். அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் முன்பதிவு வசதிகள் இல்லாததால், மூத்த குடிமக்கள் பட்டுக்கோட்டை சென்று வர சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் திறக்க வேண்டும் என முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.