சேலம், ஜூன் 7- சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த இளம்பெண் தவறான சிகிச்சையால் மருத்துவமனையிலேயே உயிரிழந்ததாக அப்பெண்ணின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனவே, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி (34). கடந்த மே 24ஆம் தேதியன்று பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த நாளில் கலைவாணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கிடையே உடல் நலம் பாதிக்கப்பட்டு திங்களன்று இரவு திடீரென கலைவாணி உயிரிழந்தார். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் அலட்சியத்தாலும், பிரசவித்த பின்னர் மருத்துவமனை வளாகத்தில் ஒவ்வொரு பரிசோதனைக்கும், செவிலியர்கள் உதவியில்லாமல் கலைவாணியை நடந்தே அழைத்து சென்றதால், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், மயக்க மருந்து அதிகளவில் கொடுத்ததால் தான் கலைவாணி உயிரிழந்ததாகக்கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பெண்ணின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டக்காரர்களுடன், அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது, தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பிரேத பரிசோதனையின்போது வீடியோ பதிவு செய்ய வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து சந்தேக மரணம் என்ற அடிப்படையில் மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை நடப்பதை ஒளிப்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்பது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பி.ராமூர்த்தி, எம்.குணசேகரன், பொன்.ரமணி, ஏ.முருகேசன், பனமரத்துப்பட்டி ஒன்றியச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.