சிதம்பரம், ஏப்.22- சிதம்பரம் அருகே விபிஷ்ணபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வருமுன் காப்போம் திட்டத்துடன் இலவச பொது மருத்துவ முகாம் வெள்ளியன்று(ஏப்.22) நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் பங்கேற்று மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,“ ஒன்றிய அரசின் பிரதிநிதியாக செயல்படக்கூடிய ஆளுநர், மாநில அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஆனால், அவரை பயன்படுத்தி மாநிலத்தில் குழப்பத்தையும், பதற்றத்தையும் உருவாக்க முயற்சி செய்து பாஜக” என்றார். இளையராஜா மோடியைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அந்த கட்சியில் கூட சேர்ந்து கொள்ளட்டும் அதைப்பற்றி கவலை இல்லை. ஆனால் அம்பேத்கரும், மோடியும் ஒரே வழியில் சிந்திக்கக் கூடியவர்கள் இல்லை. இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசியதைத்தான் தவறு என்கிறோம் என்றும் திருமாவளவன் கூறினார். மக்கள் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அம்பேத்கர். சனாதன சக்திகளுக்கு சேவை செய்பவர் மோடி. இரண்டு பேரும் ஒரே நேர்க்கோட்டில் பொருந்தக் கூடியவர்கள் அல்ல. இரண்டு பேரும் இரு துருவங்களாக சிந்திக்கக் கூடியவர்கள். அதனால் இருவரையும் ஒப்பிடுவதை ஏற்க முடியாது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.