வேலூர், மே 23- போட்டிகளில் பங்கேற்க நிதி வேண்டும் என பளு தூக்கும் வீராங்கனை மனு அளித்துள்ளார். வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்கள் அளித்தனர். வேலூர் சத்துவாச்சாரி இந்திரா நகரைச் சேர்ந்த ரித்திகா (16) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் அலமேலுமங்காபுரம் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறேன். கிரீஸ் நாட்டில் நடந்த பளுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு 49 கிலோ எடைப்பிரிவில் 150 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம் பெற்றேன். எனது தந்தை கல் உடைக்கும் தொழிலாளி. இதனால் போதிய வருமானம் இல்லாததால் என்னால் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் நிதி உதவி அளிக்க வேண்டும். அதன் மூலம் மேலும் பல சாதனைகள் புரிய உதவியாக இருக்கும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.