கிருஷ்ணகிரி ஜூன் 28-
கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் சேரும் 25 விழுக்காடு மாணவர்களிடமும் கட்டாய நன்கொடை வசூலிக்கப்படுவதை கண்டித்தும், சட்டத்தை மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட கல்வி அலுவலரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
ஓசூர் பரிமளம் மெட்ரிக் மற்றும் செவன்த் டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் அரசின் கல்வி உரிமைச்சட்டத்தை மதிக்காமல் ரூ20ஆயிரம் வரை கட்டாய நிதி வசூல் செய்யப்படுகிறது. இது குறித்து பல மாணவர்கள் புகார் அளித்ததின் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலரிடம் கடந்த 23ஆம் தேதி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட கல்வி அலுவலரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (ஜூன் 28) வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், ஒன்றிய செயலாளர் நாகேஷ்பாபு கலந்து கொண்டனர்.