districts

img

சுடுகாடின்றி அவதிப்பட்ட கிராம மக்கள்: சிபிஎம் தொடர் போராட்டத்தால் வெற்றி

கிருஷ்ணகிரி, அக்.28- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், பெரிய கூட்டு குளம் ஊராட்சி மன்றத்திற்கு பட்ட நாகனூர் கிராமம். இங்கு 80 குடும்பங்கள் உள்ளன. அங்குள்ள நிலத்தில் 15 பேரை தவிர மற்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல தலை முறைகளாக விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். அனுபவ விவசாய நிலத்திற்கு பட்டா கேட்டும், சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்ககோரியும் கடந்த ஜூன் மாதம் கிராம மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.  இதனையடுத்து, அரசு புறம்போக்கு நிலத்தை அடையாளம் காட்டி இங்கு பிணத்தை அடக்கம் செய்து கொள்ள வாய்மொழியாக உறுதியளித்தார். பின்னர், சம்பந்தப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்ட ஊத்தங்கரை வட்டாட்சி யர், சுடுகாட்டுக்கு நிலத்தை முறை யாக அளவீடு செய்து தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனையடுத்து, ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிளைச் செயலாளர் குப்பன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீண்டும் வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அப்போது, சுடுகாட்டுக்கு 20 சென்ட் நிலம் ஒதுக்கி தருவதாக உறுதியளித்தார். ஆனால், மேற்கொண்டு எந்த பணிகளும் நடக்கவில்லை.  பிறகு, கால்நடைகளுடன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த தகவலை அறிந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அதி காரிகள்  பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியரின் அனுமதிக்காக காத்திருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், இம்மாதம் 27 ஆம் தேதி சந்திரா என்பவர் இறந்து விட்டார். அதிகாரிகள் ஏற்கெனவே தேர்வு செய்து கொடுத்த இடத்தில் பிரேதத்தை புதைக்க சென்ற போது வட்டாட்சியர் தடுத்துள்ளார்.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் ஊர் பொதுமக்கள் பிரேதத்துடன் தர்ணா வில் ஈடுபட்டனர். பிறகு, ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு தலையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் பேசினார். ஆனால் நடவடிக்கை இல்லை. பின்னர், தலைமைச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து, இரவு 11 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறளன் தலைமையில் அதி காரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தனர்.அப்போது, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 20 சென்ட் நிலத்தை அளவீடு செய்து கொடுத்துள்ளனர். ஒதுக்கப்பட்ட இடத்தில் நள்ளிரவு 2 மணிக்கு சவத்தை அடக்கம் செய்தனர்.  இந்த போராட்டத்தில் வட்ட செயலாளர் மு.மகாலிங்கம், நாகனூர் கிளை செயலாளர் குப்பன், பாஞ்சாலராசன், நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மார்க்சிஸ்ட் கட்சிக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டுதலையும் வரவேற்பையும் தெரிவித்தனர்.