சென்னை, பிப். 28 - புதிய அடுக்குமாடி குடியிருப்பு திறந்தும், ஒதுக்கீடு, குடிநீர் இணைப்பு வழங்காததை கண்டித்து புதனன்று (பிப்.28) வள்ளீஸ்வ ரன் தோட்டம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாப்பூர் பகுதி, வள்ளீஸ்வரன் தோட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. 630 வீடுகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு பிப்.4ந் தேதி துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். ஆனால், குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு, வடிகால் இணைப்பு வழங்காமல், மின்சார மீட்டரை பொருத்தாமல் உள்ளனர். இதனால் முழுமையாக பங்களிப்பு தொகையை செலுத்திய 176 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கியும், வீடுகளை தராமல் அதிகாரிகள் அலைகழித்து வந்தனர். இதனை கண்டித்து வள்ளீஸ்வரன் தோட்டம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனை யறிந்து அங்கு வந்த வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் குடியிருப்போர் நல சங்க செயலாளர் எஸ்.குமார், நிர்வாகிகள் எஸ்.வெங்கடேசன், எஸ்.குமார் உள்ளிட்டோருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இரண்டு நாட்களில் அனைத்து பணிகளையும் முடித்து மார்ச் 1ந் தேதி முதல் பிளாக் வாரிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று உறுதியளித்த அதிகாரிகள், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகளையும் தொடங்கினர்.