districts

img

குளத்தில் தண்ணீர் எடுக்க பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி விசாரணை

திருவண்ணாமலை, மே 12-

    வந்தவாசி அருகே குளத்தில் தண்ணீர் எடுப்பதற்கு பட்டியல் இன மக்களுக்கு அனுமதி மறுக்கும் விவகாரம் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விசாரணை நடைபெற்றது.

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மருதாடு கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பாரத சொற்பொழிவுடன் திருவிழா நடைபெறுவது வழக்கம். 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் கடைசி நாள் திருவிழா தலித் மக்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதற்கு உண்டான அனைத்து செலவினங்களையும் தலித் மக்களே வசூலித்து விழாவை செய்வது வழக்கமாக இருந்து  வருகிறது.  

   இந்த விழாவின்போது அருகிலுள்ள குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து சாமி சிலை மீது ஊற்றி அலங்கரிக்க வேண்டும். ஆனால், பட்டியலின மக்கள் குளத்தில் இறங்கி தண்ணீரை எடுக்கக் கூடாது என்று இந்த ஆண்டு, சாதிய ஆதிக்க சக்திகள் மறுத்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே   பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

  இந்த தகவலை அறிந்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று பட்டியலின மக்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர். முன்னணியின் மாவட்டச் செயலாளர் ப. செல்வன், மாவட்டப் பொருளாளர் எஸ். சிவகுமார், சிபிஎம் வட்டச் செயலாளர் ஏ. அப்துல் காதர், சிறுபான்மை மக்கள் நலக்குழு  மாவட்ட தலைவர் யாசர் அராபத், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். மாரிமுத்து ஆகியோர் இதில் பங்கேற்றனர்.