districts

இழப்பீடு வழங்க கால அவகாசம் ஜப்தியில் இருந்து தப்பியது ஆட்சியர் அலுவலகம்

விழுப்புரம், ஜூன் 8-

    வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீடு வழங்காததால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்தனர்.

    விழுப்புரம் கே.கே.சாலை, கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ராதாம்மாள் (70). இவ ருக்கு சொந்தமாக விழுப்புரம் தந்தை பெரி யார் நகர் பகுதியில் 2,400 சதுர அடி பரப்பளவில் இடம் இருந்தது. இந்த இடத்தை கடந்த 1992இல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்புகள் கட்டுவதற்காக கையகப்படுத்தியது.

   இதற்காக ராதாம்மாளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதாக வீட்டுவசதி வாரியம் அறிவித்தது. ஆனால் உரிய இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை. இதனால் கடந்த 2001இல் விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ராதாம்மாள் வழக்கு தொடர்ந்தார்.  

   இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராதாம்மாளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையான ரூ.4 லட்சத்து 99 ஆயிரத்து 260ஐ விரைந்து வழங்கும்படி வீட்டுவசதி வாரியத்திற்கு உத்தரவிட்டது. இருப்பினும் இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்காததால் மனுதாரர் ராதாம்மாள் சார்பில் வழக்கறிஞர் தனராஜன் கடந்த 2013இல் நிறைவேற்று மனுதாக்கல் செய்தார்.

    இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், ராதாம்மாளுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.10.5 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பிறகும் இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அசையும் சொத்துக்களை ஜப்தி செய்யுமாறு கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.  

    இந்நிலையில், குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும் வீட்டுவசதி வாரியம், ராதாம்மாளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை.

    இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துக்களான 5 கணினிகள், 10 இரும்பு அலமாரிகள், 10 மின்விசிறிகள், 10 டேபிள்கள், மாவட்ட கலெக்டரின் வாகனம் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்வதற்காக புதனன்று (ஜூன் 7) நீதிமன்ற ஊழியர்கள் வந்தனர். அப்போது அங்கு மாவட்ட ஆட்சியர் இல்லாததால், அவர்களிடம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அரிதாஸ் 2 மாதம், கால அவகாசம் வழங்கும்படி கேட்டார். அதன்பேரில் ஜப்தி நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்திவைத்து அங்கிருந்து ஊழியர்கள் புறப்பட்டுச் சென்றனர்.