districts

சென்னை முக்கிய செய்திகள்

விக்கிரவாண்டி தனியார் பள்ளியில்  குழந்தை உயிரிழந்த சம்பவம் தாளாளர் உட்பட மூவர் கைது

விழுப்புரம், ஜன.4- விக்கிரவாண்டியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி படித்து வந்த 4 வயது குழந்தை லியா லட்சுமி, வெள்ளிக்கிழமை (ஜன.3)  உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் இருந்த செப்டிக் டேங்கில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இந்த வழக்கு தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் பள்ளி வளாகத்தில் மூடப்படா மல் இருந்த கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் பல்வேறு தரப்பினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தையின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்ப தாக பெற்றோரும், உறவினர்களும் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து பள்ளி ஊழியர்கள், குழந்தையை மீட்டு காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகளை வெளியிட்டு சந்தேகங்களுக்கு பள்ளி நிர்வாகம் பதில் அளித்திருந்தது. இந்நிலையில் உயிரிழந்த குழந்தை லியா லட்சுமியின் தந்தை பழனிவேல், தனது குழந்தையின் இறப்பிற்கு காரண மானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பள்ளியின் தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டொமில்லா மேரி, உயிரிழந்த குழந்தை லியா லட்சுமி யின் வகுப்பு ஆசிரியை ஏஞ்சல் ஆகிய 3 பேரையும் சனிக்கிழமை(ஜன.4) அதி காலை தனிப்படை கைது செய்தனர். சனிக்கிழமை காலை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை லியா லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்களிடம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து அறிவித்த ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

ஞானசேகரன் வீட்டில் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின

சென்னை, ஜன.4- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஞானசேகரனை தவிர்தது மற்றொரு நபரும் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகப்படப்படுகிறது. மாணவியை மிரட்டும்போது போனில் சார் என குறிப்பிட்டுள்ளார். யார் அந்த சார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.  இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் சனிக்கிழமையன்று காலை ஞானசேகரன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.  இதில் குற்றவாளி பயன்படுத்தி வந்த லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இவர் இதுபோன்ற பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறுப்படுகிறது. இதனால் லேப்டாப்பை ஆய்வு செய்தால் அவர் எடுத்த வீடியோக்கள் உள்ளனவா என தெரியவரும். ஞானசேகரன் மீது கொள்ளை தொடர்பான வழக்குகளும் உள்ளது. தொடர்பாக அவருடைய இரண்டு மனைவிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையடித்த பணத்தில் நகைகள், சொத்துகள் வாங்கியுள்ளாரா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை துறைமுகம் சரக்குகளை கையாள்வதில் சாதனை

சென்னை, ஜன.4- சென்னை துறைமுகம் கடந்த 2024-ம் ஆண்டு 5.326 மில்லியன் மெட்ரிக் டன் மாதாந்திர சரக்கு போக்குவரத்தை கையாண்டு சாதனை புரிந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக சென்னை துறைமுகம் இந்த அலவை எட்டி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைகளுக்கு உறுதுணையாக இருந்த பல்வேறு பங்களிப்பாளர்களின் முயற்சிகளை சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் சுனில் பாலிவால் பாராட்டினார்.

பனிமூட்டம் காரணமாக  விமான சேவை ரத்து

 சென்னை, ஜன.4- தில்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் மற்றும் பெங்களூரில் நிலவும் பனிமூட்டம் காரணமாக சனிக்கிழமையன்று  (ஜன. 4) சென்னை விமான நிலையத்திலிருந்து தில்லி, பெங்களூர் உள்ளிட்ட விமான நிலையம் செல்லும் சுமார் 15க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்ற நிலையில் தில்லி மற்றும் பெங்களூரில் இருந்து சென்னை வரவேண்டிய இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய நிகழ்ச்சி

சாகித்ய அகாடமி விருதாளர் ஆ.இரா.வேங்கடாசல பதிக்கு பாராட்டு விழா: காலை 10.30 மணி, அரசு மேல்நிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர் நகர்(கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகே),சென்னை. பங்கேற்போர்: ஆ.இரா. வேங்கடாசலபதி. சிகரம் ச.செந்தில்நாதன், பெ.கி.பிரபாகரன், கவிஞர் இரா.தெ.முத்து உள்ளிட்ட பலர். ஏற்பாடு: கே.கே.நகர் இலக்கிய வட்டம்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஜன. 4- அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அந்த மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.