சென்னை, ஜூலை 18 - போராட்டங்கள் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று சிபிஎம் மூத்த தலைவர் வே. மீனாட்சி சுந்தரம் கூறினார். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைப் போராட்டத்தை; வர்க்கப் போராட்டத்தை உயிர்த்துடிப்போடு நடத்திய தோழர் பி.ஆர். பரமேஸ்வரனின் 25வது ஆண்டு நினைவு தினம் மற்றும் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி புதனன்று (ஜூலை 17) கேரளா சமாஜத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தோழர் பி.ஆர்.பி. உருவப்படத்தை வே.மீனாட்சிசுந்தரம் திறந்து வைத்தார். பிஆர்பியின் படத்தை மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் வெளியிட, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மிருதுளா பெற்றுக் கொண்டார்.
மத்தியக்குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணன் தீக்கதிர் சந்தாக்களை பெற்றுக் கொண்டு பேசினார். தோழர் பி.ஆர்.பி-யின் வரலாற்றை, அவருடன் பணியாற்றிய அனு பவங்களை பகிர்ந்து கொண்ட வே.மீனாட்சிசுந்தரம், “விபிசி, அரிபட், பிஆர்பி ஆகிய மூவரும் கம்யூ னிஸ்ட்டுகளுக்கு உதாரணமாக செயல்பட்டனர்.
குழந்தை தையல் தொழிலாளியாக வாழ்வை தொடங்கிய பிஆர்பி. கம்யூனிஸ்டாக மாறி, வர்க்க உணர்வு பெற்று தொழிலாளர்களை அணி திரட்டினார். சுய கல்வி கற்று, தலைமறைவு காலத்தில் ‘நினைவுகள் அழிவதில்லை’ நாவலையும், அதன்பிறகு ‘பிணந்தின்னிகள்’ நூலையும் எழுதினார். கற்றோரின் கேள்விகளுக்கும் தத்துவார்த்த ரீதியாக பதிலளித்தவர் பி.ஆர்.பி.,” என்றார். “பி.ஆர்.பி எந்த தொழிற் சங்கத்திற்கும் தலைவராக இருந்ததில்லை. ஆனால், உரிமைப் போராட்டங்கள் எங்கு நடந்தாலும் அங்கு சென்று ஆதரித்து பேசுவார். நமது அமைப்புகள் ஏராளமான போராட்டங்கள் நடத்துகின்றன. அந்த போராட்டங்கள் அரசியல் விழிப்பு ணர்வை உருவாக்கும் வகையில் மாற, தலைமை தாங்குகிறவர்களுக்கு தத்து வார்த்த தெளிவும் கட்சிப்பிடிப்பும் தேவை. தத்துவார்த்த ரீதியாக கட்சி ஊழியர்களை உருவாக்க தோழர்கள் வி.பி.சி., பி.ஆர்.பி., போன்று திட்டமிட்டு செயல்பட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். Z