வேலூர், செப்.10- வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா மற்றும் பால் உற்பத்தி யாளர்கள் உடன் கலந்துரையாடல் நிகழ்வு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், பிறகு, ரூ. 1.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி கள் வழங்கினார்.முன்னதாக வேலூர் மாவட்டம், வல்லண்டராமம் ஊராட்சியில் புதிய பால் குளிரூட்டும் மையத்தை திறந்து வைத்தார். இதில், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு துறை இயக்கு நர் வினித், வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, அணைக்கட்டு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு மற்றும் ஆவின் நிர்வாக அதிகாரிகள் பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,“கடந்த காலங்களில் பால் கூட்டுறவு சங்கங்கள் நட்டத்தில் இயங்கி வந்தது. இந்த அரசு எடுத்து வரும் நடவடிக் கையால் தற்போது லாபத்தில் இயங்கி வருகிறது” என்றார். கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை 20 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆவின் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். பால் கொள்முதலை ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டரில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி உள்ளோம். ஒரு ஆண்டுக்கு 12 லட்சம் கொள்முதல் செய்துள்ளது. ஆவின் நிர்வாகத்திற்கு தனியார் துறைகளால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார். ஆவின் பொருட்களை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி ஆலோசித்து வருகிறோம். சர்வதேச மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. நம் நாட்டின் ஐஸ்கிரீம் நல்ல தரத்துடன் உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.