districts

img

சின்னாபின்னமான மதுரவாயல் புறவழிச்சாலை

அம்பத்தூர், டிச. 14- அம்பத்தூர் தொழிற்பேட்டை 1,400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அங்கு மட்டுமல்லாமல் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், முகப்பேர், அத்திப்பட்டு, மண்ணூர்பேட்டை, மங்களபுரம், பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்த்து சுமார் 5 ஆயிரம் சிறிய, பெரிய நிறுவனங்கள் உள்ளன.  மேலும், 100க்கும் மேற்பட்ட ஏற்றுமதி ஆடை, சாப்ட்வேர், கால் சென்டர் நிறுவனங்களும் உள்ளன. இங்கு சென்னை, புறநகர், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினசரி சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும், இலகுரக வாகனங்களும் தமிழகம், ஆந்திரா, பெங்களூரு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள  தொழிற்சாலைகளுக்கு வந்து செல்கின்றன. மேலும் அம்பத்தூர் அருகே  உள்ள அயப்பாக்கம், எம்.ஜி.ஆர்.புரம்,  அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஐயப்பா நகர், செல்லியம்மன் நகர், ஐசிஎப் காலனி, கலைவாணர் நகர், பாரதிதாசன் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பேஸ் 1, 2, 3 அத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை, அண்ணாநகர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால், இந்த சாலை வழியாகத்தான் செல்ல  வேண்டும். இந்நிலையில் சமீபத்தில் பெய்த  மழையால் அம்பத்தூர் தொழிற்பேட்டை யில் இருந்து வானகரம் செல்லும் புறவழிச் சாலையில் பெரும்பாலான இடங்கள் குண்டும் குழியுமாக மாறி விட்டது  அதேபோல் இந்த சர்வீஸ் சாலையில் இருந்து கோல்டன் பிளாட் பேருந்து நிறுத்தம் வரை உள்ள சாலையும் குண்டும்  குழியுமாக மாறிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் சரியான மின்விளக்கு வசதி இல்லாததால் முதியோர், வாகன ஓட்டிகள் அடிக்கடி பள்ளத்தில் விழுவதாக அப்பகுதி மக்கள்  கூறுகின்றனர். மழைநீர் வடிகால்வாய் வசதி இருந்தும் முறையாக சாலை அமைக் காததால் சாலையில் தண்ணீர் தேங்கி விரைவில் சாலைகள் பழுதடைகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக சாலை அமைத்து மழைநீர் வடிகால்வாய்களில் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.