விழுப்புரம்,மே 23-
கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இயல்பு நிலையை விட கூடுதல் வெப்பம் பதிவாகி வருகிறது.
வெயிலின் தாக்கத்திலிருந்து விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தினமும் செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி செய்திகளில் வெப்பத்தின் அளவு மற்றும் வெப்ப அலை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
தாகம் இல்லாதபோதும், வெப்பநிலையை கருத்தில் கொண்டு அவ்வப்போது தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும். வெயில் காலங்களில் லேசான ஆடைகள், வெளிரிய ஆடைகள், உடலை இறுக்கிப்பிடிக்காத தளர்வான முழுக்கை ஆடைகள், பருத்தி நூல் துணி ஆடைகளை அணிதல் வேண்டும்.
குடை, தொப்பி மற்றும் காலணிகளை அணிந்து செல்லவேண்டும். இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வீடுகளில் தயாரிக்கப்படும் பானங்களான லெஸி, எலுமிச்சை சாறு, மோர், அரிசி வடிநீர், ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல், பழச்சாறு போன்றவற்றை பருக வேண்டும். வெயிலினால் மயக்கமோ, உடல்பாதிப்போ ஏற்படுமாயின் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். கால்நடைகளை நிழற்பகுதியில் கட்டி வைக்க வேண்டும்.
கால்நடைகளுக்கு அவ்வப்போது பருக போதுமான அளவு தண்ணீர் வைக்க வேண்டும். மின்விசிறி மற்றும் ஈர துணியை பயன்படுத்தி வெப்ப பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
உடலில் நீர்ச்சத்தை ஆவியாக்கும் மது, தேனீர், காபி மற்றும் மென்பானங்கள் போன்றவற்றை பருகுவதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.