சிதம்பரம், நவ.14- கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரி மூலம் 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 46.5 அடியில் இருந்து 40 அடியாக சரிந்தது. இதனால் போதிய தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்தது. இதனால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறக்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சிதம்பரம், காட்டு மன்னார்கோவில் புவன கிரி, சேத்தியாதோப்பு, கொத்தவாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 45 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையால் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. கருவாட்டு ஓடை, வெட்டு வாய்க்கால், செங்கால் ஓடை வாய்க்கால் வழி யாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. இதனால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது ஏரி 43.5 அடி நிரம்பியுள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 50 கன அடி சென்னை குடிநீருக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது. சம்பா, தாளடி உள்ளிட்ட சாகுபடி நேரங்களில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.