செங்கல்பட்டு,மே 29- வாட்ஸ் ஆப் மூலம் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பட்டா வழங்கினார். செங்கல்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட பாலூர் அடுத்த கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் என்பவரது மகன் சத்தியமூர்த்தி வயது 39, மனைவி மற்றும் இரு குழந்தைக ள் உள்ள நிலையில் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தைகள் தாய் வீட்டிற்கு பிரிந்து சென்றனர். தாயின் அரவணைப்பில் இருந்த சத்தியமூர்த்தி எனக்கு வீடு இல்லை என்றும் வீட்டு மனைபட்டா வழங்கி, வீடு கட்டி தர மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் ஆப் மூலம் கடந்த மே 27 அன்று தகவல் அளித்திருந்தார். இந்த தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா மேற்பார்வையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதனன்று (மே 29) அதற்கு தீர்வு காணும் வகையில் சத்தியமூர்த்தியை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் நேரில் சென்று வீட்டு மனை பட்டா வழங்கி இரண்டு மாதங்களில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் வீடு கட்டி தர வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தர விட்டார். மேலும் மின்சார அடுப்பு மற்றும் சமைப்பதற்கு மின்சார குக்கர் ஆகிய வற்றையும் வழங்கினார். மேலும் அவருக்கு மாற்று திறனாளி நலத்துறையின் மூலம் ஏற்கெனவே அவருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.