திருவள்ளூர், ஜூலை 15- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (ஜூலை 15) அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழச்சேரி ஊராட்சி உள்ள புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து முதல மைச்சர் திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு கூட்ரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழகத்தின் சார்பில் ரூ.3.81 கோடி செலவில் 8 புறநகர பேருந்துகள் மற்றும் 2 மகளிர் விடியல் பயண நகர பேருந்துகள், என மொத்தம் 10 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ். சந்திரன் (திருத்தணி), தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.