தாமதமாகும் முதுநிலை மாணவர் சேர்க்கை: தமிழ்நாடு அரசு தலையிட கோரிக்கை
சென்னை, ஜூலை 21 - அரசு கல்லூரிகளில் முதுநிலை மாணவர் சேர்க்கை தாமதமாகி வருவதால், சுயநிதி கல்லூரிகள் நோக்கி மாணவர்கள் செல்லும் சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் செயல்படும் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 109 கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் சுமார் 24 ஆயிரம் இடங்கள் உள்ளன. சென்னை, பாரதியார் பல்கலைக் கழகங்கள் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடாமல் உள்ளன. இதனால், அரசு கல்லூரிகளில் முதுநிலை மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடாமல் உள்ளது. அரசு மே 22 அன்று வெளியிட்ட அரசாணை 110ல், அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரி களில் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அதன்படி, அரசிடமிருந்து இதுவரை அறிவிப்பு வரவில்லை. ஆனால், உதவி பெறும், சுயநிதிக் கல்லூரிகள் 5 ஆம் பருவம் வரையிலான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் முதுநிலை மாணவர் சேர்க்கையை தொடங்கி, முடிக்கும் நிலைக்கு வந்துள்ளது. அரசு கல்லூரிகள், அரசாணை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதால், பல்கலைக் கழகங்களின் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றன. இதனால், உதவிபெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படு கின்றனர். அரசு கல்லூரிகளில் தாமதமாக மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், முதல் பருவ தேர்வுக்கு மிக விரைவாக தயாராக வேண்டிய சூழல் உருவாகிறது. எனவே, சென்னை மற்றும் பாரதியார் பல்கலைக் கழகங்களின் தேர்வு முடிவு களை விரைந்து வெளியிட அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தாமதங்களை தவிர்க்க கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிடும் கல்வி ஆண்டிற்கான கால அட்டவணையை அனைத்து பல்கலைக்கழகங்களும் கடைபிடிக்க வழிகாட்டுதல்களை அரசு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் சோ.சுரேஷ் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தேமுதிக பிரமுகரிடம் விசாரணை
சென்னை,ஜூலை 21- பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அண்மையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, குன்றத்தூர் திருவேங்கடம் உட்பட 11 பேரை கைது செய்தனர். இவர்களில் திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய திருப்பமாக தேமுதிக நிர்வாகி ஒருவரிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். திருவள்ளூரை சேர்ந்த அவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக கவுன்சிலர் ஹரிஹரனுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 5 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களில் வழக்கறிஞர் ஒருவரும் உள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான பெண் தாதா அஞ்சலியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் கூட்டாக சதி செய்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருப்பது அம்பலமாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய 6 செல்போன்கள் அதிமுக முன்னாள் நிர்வாகியை, திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினருமான ஹரிஹரனிடம் கொடுத்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் 3 செல்போன்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் எத்தனை சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என கண்டுபிடிக்கும் நோக்கில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தண்டையார்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் இன்று மின்தடை
சென்னை, ஜூலை 21- மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இடங்களில் தண்டையார்பேட்டை, பல்லாவரம், அடையாறு பகுதிகளில் திங்களன்று (ஜூலை 21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். தண்டையார்பேட்டை நேதாஜி நகர், நேரு நகர், குமரன் நகர், சிவாஜி நகர், சுந்தரம்பிள்ளை நகர், மணலி சாலை, ஜெ.ஜெ.நகர், சுண்ணாம்பு கால்வாய், வ.உ.சி. நகர், கருமாரியம்மன் நகர், மாதா கோயில் தெரு,ரிக்சா காலனி, புது சாஸ்திரி நகர். ஐ.டி.காரிடர் ஆனந்தா நகர், 200 அடி ரேடியல் ரோடு , சாய் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில், பல்லாவரம் மல்லிகா நகர், பி.வி. வைத்தியலிங்கம் ரோடு, கட்டபொம்மன் நகர், ஆர்.கே.வி. அவின்யு, திருமுருகன் நகர், மாணிக்கம் நகர், வேல்ஸ் காலேஜ் மெயின் ரோடு மற்றும் பங்காரு நகர் கிழக்கு ஒரு பகுதி. அடையார் காந்தி நகர் 2-வது மெயின் ரோடு, காந்தி நகர் 2-வது குறுக்குத் தெரு மற்றும் காந்திநகர் 3-வது மெயின் ரோடு ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கடல் அலையில் சிக்கி சென்னை ஐடி ஊழியர் 2 பேர் பலி
சிதம்பரம், ஜூலை 21- சென்னை அருகே கூடு வாஞ்சேரியில் உள்ள ஜோ.கோ கார்ப்பரேஷன் என்கிற ஐடி கம்பெனியில் பொள்ளாச்சியை சேர்ந்த கணினி பொறியாளர்கள் ஷாம் சுந்தர் (26) கோகுல் பிரசாத் (26) வேலை செய்து வந்தனர். கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டை கடற்கரைக்கு ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 21) மதியம் வந்தனர். இவர்க ளுடன் மொத்தம் 6 பேர் பாண்டிச்சேரியில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா தளத்திற்கு சென்று படகு சவாரி செய்த னர். பின்னர் சாமியார் பேட்டை கடற்கரை குளித்துள்ளனர். அப்போது ஷாம் சுந்தர் மற்றும் கோகுல பிரசாத் ஆகியோர் கடல் அலையில் சிக்கி அடித்து சென்றுள்ளார். பிறகு அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 அவசர ஊர்தி மூலம் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இரு வரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசா ரணை செய்து வரு கின்றனர்.
தென்மாவட்டங்கள், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கான அறிக்கை
சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் வழங்கிய இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள்
மதுரை, ஜூலை 21- மதுரை, தென்மாவட்டங்கள், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியவை குறித்த அறிக்கையை சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் வழங்கினர். இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது “எக்ஸ்” சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழ்நாடு தலைவர் ஶ்ரீவத்ஸ்ராம், மதுரை மண்டலத்தலைவர் சுந்தர் கண்ணன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி, மதுரை மற்றும் தென் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கு செய்ய வேண்டியவைகள் குறித்த அறிக்கையை அளித்தனர். “ஒன்றிய அரசு கடந்த பத்தாண்டு காலத்தில் உள்கட்டமைப்புகளுக்கான முதலீட்டை, வட மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழ்நாட்டிற்கு பெருமளவு குறைத்துவிட்டது. நாம் கடுமையான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். நகரமயமாக்கல் மிக அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது எல்லாவகையிலும், வாய்ப்பிலும் அதிக பெரு நகரங்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. எனவே உள்கட்டமைப்பிற்கான முதலீடு மிக முக்கியத் தேவையாக இருக்கிறது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக நாம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறோம். உதாரணமாக வாரணாசி விமானநிலையத்திற்கு சுரங்கபாதை திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்குகிற ஒன்றிய அரசு, அதைவிட பலமடங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பயணிக்கிற மதுரை விமான நிலையத்தில் கூடுதல் தொழில் பாதுகாப்புப் படையினரை நியமிக்க, ரூ.30 கோடி செலவாகும் என்கிற காரணத்தால் அனுமதி தர மறுக்கிறது. இந்த நிலையிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை பெற நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். வரவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரிலும் தொடர்ந்து முயற்சிப்போம்” என்பதை அவர்களிடம் தெரிவித்தேன்.
ஜிப்மர் செவிலியர் பணியில் புதுவைக்கு முன்னுரிமை வாலிபர் சங்கம் வலியுறுத்தல்
புதுச்சேரி, ஜூலை 21- நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசின் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், மோடி தலைமையிலான பாஜக அரசு இளைஞர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால், புதுச்சேரி மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் இளைஞர்களுக்கு அதிக மாக வேலை கொடுப்போம் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த என்.ஆர் - பாஜக கூட்டணி அரசு, காலி யாக உள்ள 10,000 திற்கும் மேற்பட்ட அரசு பணியிடங்களை நிரப்பவில்லை. புதிய வேலைவாய்ப்புகளையும் உரு வாக்கவில்லை. இத்தகைய இளைஞர் விரோத போக்குகளை மூடி மறைக்கும் வகை யில் சொற்ப இடங்களை மட்டும் நிரப்பி னர். அதையே, தற்போது சாதனையாக விளம்பரம் செய்து புதுச்சேரி மக்களையும், இளைஞர்களையும் ஏமாற்றி வருகிறார்கள். இந்நிலையில் ஒன்றிய அரசின் நிறு வனங்களான ஜிப்மர், மத்திய பல்கலைக் கழகத்தில் புதுச்சேரி இளைஞர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட இருக்கும் 165 செவிலியர் பணியிடங்கள் 25 விழுக்காடு இடங்கள் புதுச்சேரி இளை ஞர்களுக்கு வழங்கிய மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். செய்ய தவறினால், பாதிக்கும் இளை ஞர்களை ஒன்று திரட்டி மாநிலம் ஸ்தம்பிக்கும் அளவில் உரிமை போராட்டம் நடைபெறும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர்கள் கௌசிகன், சஞ்சய் சேகரன் ஆகியோர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் விடுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு
விழுப்புரம், ஜூலை 21- விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி,கல்லூரி விடுதிகளுக்கு 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விடுதி, மேலாண்மை மென்பொருள் மூலம் நடத்தி சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குநர் கடிதத்தில் தெரி வித்துள்ளது. எனவே, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி,கல்லூரி விடுதிகளுக்கு 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
ஆசிரியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு
ஆசிரியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு செங்கல்பட்டு, ஜூலை 21- 31 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி சென்னையில் வருகிற 29,30,31 ஆகிய நாட்களில் பள்ளி கல்வி துறை அலுவலகம் முன்பு நடை பெறும் தொடர் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று ஆசிரியர் சங்கங்க ளின் கூட்டு குழு முடிவு செய்துள்ளது.ஆசிரியரி கூட்டணியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோசப் தலைமை யில் செங்கல்பட்டில் நடை பெற்ற போராட்ட ஆயத்த மாநாட்டில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. சங்க தலைவர்கள் த.ச. ரமேஷ், மு.சீனிவாசன், சு.மணிமோகன், ப.லூக் சாமுவேல்,கோ.க.முருகன், சுரேஷ், வெங்கடாசலம் உள்ளிட்டோர் உரை யாற்றினர்.