சென்னை, டிச.16- மாநில திட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு வரைவு கொள்கை ஆவணங்கள் மற்றும் ஐந்து ஆய்வறிக்கைகளை மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் முதல மைச்சரிடம் சமர்ப்பித்தார். இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- மாநில திட்ட குழுவானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் ஓர் உயர் மட்ட ஆலோசனைக் குழுவாகும். தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி மக்கள் நல திட்டங்களை மதிப்பீட்டு ஆய்வு செய்தல், அரசு ஆளுகை யில் எழும் புதிய தேவைகளுக்கு ஏற்ப கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், பல்வேறு ஆய்வுகள் நடத்தி அறிக்கை தயாரிப்பதிலும் தனது பங்களிப்பை மாநில திட்ட குழு நல்கி வருகிறது. இந்த நிலையில், மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் , மாநில திட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு வரைவு கொள்கை ஆவணங்கள் மற்றும் ஐந்து ஆய்வறிக்கைகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திங்களன்று (டிச.16) சமர்ப்பித்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், மற்றும் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா ஆகியோர் உடன் இருந்தனர். மாநில திட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையானது, வெப்ப தணிப்பு முறைகளை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறை படுத்துதல் உள்ளிட்ட முன்னெடுப்புகளை முன்மொழிகிறது. தமிழ்நாடு வெப்பதணிப்பு அறிக்கை (DCS) முன்னெடுப்புக்கென மாநில திட்ட அறிக்கை குறுகிய, நடுத்தர நீண்டகால உத்திகளுடன், அரசு துறைகளில் பொறுப்புகள் மற்றும் பங்களிப்பு விவரங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.