districts

 கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி  மாணவர் பலி

ஊத்துக்கோட்டை, ஜூன் 2- ஊத்துக்கோட்டை அருகே உள்ள அந்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பூபதி (வயது14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். செவ்வாயன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற பூபதி பின்னர் திரும்பி வரவில்லை. அவரை தேடியபோது அதே பகுதியில் செல்லும் கிருஷ்ணா கால்வாய் அருகே பூபதியின் செருப்பு மட்டும் கிடந்தது. இதனால் அவர் கிருஷ்ணா கால்வாயில் இறங்கிய போது அடித்து சென்று இருப்பது தெரிந்தது. திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய பூபதியை கடந்த 2 நாட்களாக  தேடி வந்தனர். ஆனால் அவரைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே பூண்டி ஏரி அருகே கிருஷ்ணா தண்ணீர் சேரும் இடத்தில் வியாழன்று பூபதி பிணமாக மிதந்தார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 8 ஆண்டுக்கு முன்பு இதே போல் பூபதியின் அண்ணன் தருணும் கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பலியாகினார். இப்போது அதே போல் பூபதியும் இறந்து விட்டார். இரண்டு மகன்களையும் கிருஷ்ணா கால்வாயில் பறி கொடுத்த ரமேஷ் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

;