திருவள்ளூர், நவ. 21- பள்ளிப்பட்டில் இருளர் இனத்தை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் மற்றும் அவருக்கு உதவியர்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (நவ. 21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேய நகரில் வசிக்கும் இருளர் இனத்தை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செங்கல்வராயன் மற்றும் குற்றத்தை மூடி மறைக்க முயன்ற அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி பள்ளிப்பட்டில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. குற்றவாளிகளை காவல்துறையினர் பாதுகாப்பதாக ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் குற்றம்சாட்டினர். ஆர்ப்பாட்டத்திற்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ் அரசு தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாவட்ட தலைவர் ஜி.சின்னதுரை, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சி.பெருமாள், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இ.மோகனா, செயலாளர் ஏ.பத்மா, சிபிஎம் திருத்தணி வட்ட செயலாளர் வி.அந்தோணி, சிபிஎம் பள்ளிப்பட்டு வட்ட செயலாளர் ஏ.சிவபிரசாத், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் வஜ்ரவேல், கிராம தலைவர் ஜோதி, கரும்பு சங்கத்தின் நிர்வாகி ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலிருந்து கூட்டுச்சாலை வரை கண்டன ஊர்வலம் நடைபெற்றது.