சென்னை.மே 11-
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது.
இந்த புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்த வகையில் 1-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தற்போது, மீனவர்கள் தங்கள் படகுகளை கரைகளில் பத்திரமாக நிறுத்தி வைக்கும்படி மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டதோடு, கடற்கரை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணி அதிகரிக்கப்பட்டு உள்ளது. 1-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது என அர்த்தம். இதனால் துறைமுகம் ஏதும் பாதிக்கப்படவில்லை. ஆனால், சற்றே பலமாக காற்று வீசுவதை அறிவிக்கவே இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்று சென்னை துறைமுக அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ஆழ்கடல் பகுதியில் காற்றின் தீவிரம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.