districts

குடியிருப்புகளை அகற்றும் முயற்சியை தடுத்து நிறுத்துக! முதலமைச்சருக்கு சிபிஎம் கடிதம்

சென்னை, ஏப்.6 - திரு.வி.க. நகர் பகுதியில் பயன்பாடற்ற ரயில்வே  நிலத்தில் உள்ள குடியிருப்புகளை அகற்றும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் திரு.வி.க.நகர் பகுதிச்  செயலாளர் வி.செல்வராஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி 74வது வட்டத்திற்குட்பட்ட சேமாத்தம்மன் காலனி, ராஜீவ் காந்தி நகர், டேங்க் பண்ட்  ரோடு கொன்னூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 குடும்பங்கள் இரண்டு தலைமுறை களாக வசித்து வருகின்றன. இங்குள்ளவர்கள் முறையாக சொத்துவரி கட்டி வருவதுடன், மின் இணைப்பும் பெற்றுள்ளனர். ரேசன் கார்டு,  ஆதார் கார்டு போன்ற ஆவணங்களையும் வைத்துள்ளனர். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் மார்ச் 15 அன்று குடியிருப்புகளை காலி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இங்குள்ள மக்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட ஏழை, கூலி தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களின் குழந்தைகளும் பெரம்பூர் மற்றும் சுற்று வட்டார பள்ளிகளில் படித்து வருகின்றனர். மக்கள் வசித்து வரும் நிலம் ரயில்வேக்கு சொந்த மானதா? என்கிற பிரச்சனை இருக்கிறது. இருப்பினும், ரயில்வேயின் பயன்பாட்டில் இல்லாத அந்த பகுதியானது, மாநில நெடுஞ்சாலைக்கு அப்பால் உள்ளது. எனவே, முதல மைச்சர் தலையிட்டு குடியிருப்புகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.