districts

img

வேலூரில் சின்னாபின்னமான ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலைகள்!

வேலூர், ஜூலை 20- மோடி தலைமையில் ஒன்றிய பாஜக அரசு, 2019 ஆம் ஆண்டில் 100 சீர்மிகு நகரங்களை (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்கும் அறிவிப்பை வெளியிட்டது.  இதில் வேலூர் மாநகராட்சியும் தேர்வு செய்யப்பட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு வேலூர் நகராட்சி, காட்பாடி பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு வேலூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. சீர்மிகு நகரமாக மாற்றும் முதல் நடவடிக்கையாக உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிக்கு தற்போது வரை ரூ. 1350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி ஆகிவிட்டது என பெருமை அடித்துக் கொண்டதற்கு ஏற்றார் போல் ஒன்றும் நடக்கவில்லை. அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகவே உள்ளன. பல இடங்களில் உள்ள சாலைகளில் ஜல்லி கற்கள்  கொட்டப்பட்டுள்ளன. ஆனால், இதில் பெரும்பாலான இடங்களில் கால்வாய் வசதிகள் அமைக்கப்படவில்லை. கால்வாய் ஏற்படுத்தாமல் இங்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. ஜல்லி கற்கள் மீது ‘வைப்ரேசன் ரோலர்’ உபயோகிக்காமல் வெறுமனே போட்டு விட்டு செல்வதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பெரும்பகுதி சாலைகள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் அரை அடி பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது.   காட்பாடியை சுற்றியுள்ள தெருக்கள் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளது. மழை பெய்யும் போதெல்லாம் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. வடிகால்வாய் இல்லாததால் உடனடியாக மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் முழங்கால் அளவுக்கு தேங்குகிறது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த சாலையில் பயணிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திட்டம் அறிவிக்கப்பட்ட ஆண்டுகள் பல கடந்தும் சாலைப் பணிகள், பாதாள சாக்கடை என எந்த வேலையும் முழுமைபெறவில்லை. இதனால், மழைக் காலங்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மண் சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக மாறி விட்டன. இந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை உருவாகிவிட்டது. போதாக்குறைக்கு பாதாள சாக்கடை திட்டம் காரணமாக நன்றாக இருந்த சாலைகள் கூட தற்போது படு மோசமாகி விட்டதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர். வேலூர் மாநகராட்சி செயல்பாடு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு நடத்திய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சாலைகள் பராமரிப்பு சரியில்லை, மாநகராட்சியின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என வெளிப்படையாக அதிகாரிகளை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.  - ஞானவேல்