districts

img

பாலாற்றில் திறந்துவிடப்படும் தோல் கழிவு நீர்

ஆம்பூர், ஜூன் 15- ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் மற்றும் ஷூ தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இந்த தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை பெரிய தொட்டிகளில் நிரப்பி சுத்தப்படுத்துவதற்காக ஆம்பூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தொட்டிகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கழிவுநீரை சுத்தப்படுத்தாமல் மழைக்காலங்களில் பாலாற்றில் திறந்து விடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பெய்த பலத்த மழையின் போது வாணியம்பாடி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் பாலாற்றில் திறந்துவிடப்பட்டது. பாலாற்றில் திறந்துவிடப்பட்ட கழிவுநீர் நுரையுடன் செல்வதைக் கண்ட பொதுமக்கள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். கழிவுநீரை ஆற்றில் திறந்து விடப்பட்ட நிறுவனங்களுக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவின்பேரில் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள சிற்றாறுகள் மற்றும் கண்மாய்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பாலாற்றில் கலந்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே பாலாற்றில் திறந்து விட்டனர்.

எப்போதெல்லாம் மழை பெய்து பாலாற்றில் தண்ணீர் வருகிறதோ அப்போதெல்லாம் இதே செயலில் தோல் தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாராபட்டு சோமலாபுரம் பாலாற்றில் புதன்கிழமை காலை மழைநீருடன் கழிவுநீர் கலந்து நுரை பொங்கியபடி சென்றது. இதனைக் கண்ட பொதுமக்கள் வேதனையடைந்தனர். சுத்திகரிக்கப்படாத தோல் கழிவு நீரை பாலாற்றில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், பாலாற்றில் செல்லும் தண்ணீரை குடித்து கால்நடைகள் இறக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்காக செயல்பட்டு வருகின்றனர். எனவே பாலாறு மாசுபடுவதை தடுக்க, பாலாற்றில் தோல் கழிவு நீரை திறந்துவிட்ட நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.