சிதம்பரம்,நவ.4- புவனகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட செல்ல பிள்ளையார் கோவில் தெரு. காமராஜர் நகர் ஆகிய தெருக்களில் மழை விட்டு 5 நாட்கள் ஆகியும் தெருக்களில் குளம் போல் நிற்கும் மழை நீரை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புவனகிரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின், கிளைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் பேரூராட்சி நுழைவு வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் புவனகிரி காவல் ஆய்வாளர் சரஸ்வதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மழை நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்துபூர்வமாக உத்திரவாதம் அளித்தார். பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.