அம்பத்தூர், மே 29- சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட 86ஆவது வார்டு அத்திப்பட்டில், மேட்டுத் தெரு, கலைவாணர் நகர், புதுத் தெரு ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் முறையான மழைநீர், கழிவுநீர் வடிகால் கால்வாய் இல்லாததால், குடியிருப்பு பகுதிகளில் நடுவில் குளம் போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதிலிருந்து கொசு உற்பத்தி ஆவ தாகவும், பல்வேறு நோய் ஏற்படுவதாகவும், 24 மணி நேரமும் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அது நிலத்தடி நீரில் ஊறி வீட்டில் கிணற்று நீர் பாதிப்படைந்துள்ளதாக வும் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் கூட தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாகவும் கூறினார்கள். அம்பத்தூர் நகராட்சியாக இருந்த போது அவதிப் பட்டோம், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட உடன் பிரச்சனைகள் தீரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பிரச்சினைகள் தீரவில்லை என்றனர். இதுகுறித்து அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் கழிவு நீர் வெளியேற நிரந்தர தீர்வு காண வேண்டும். குறிப்பாக நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் எங்கள் பகுதியில் விளையாட்டு பூங்கா கிடையாது. எனவே இந்த இடத்தை சுத்தப்படுத்தி நடை பயிற்சிக்கான மேடை யுடன் பூங்கா அமைத்துத் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.