சிதம்பரம், மார்ச் 17- சிதம்பரம் நகராட்சி கழிவுநீர் பாசிமுத்தான் பாசன வாய்க்காலில் கலப்பதை தடுக்க வேண்டும். சி.முட்லூர் ஊராட்சியை சிதம்பரம் தாலுகாவில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிராம மக்கள் சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர் வேதநாயகி பஞ்சநாதம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். இதனையடுத்து, சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் ஆனந்த் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது, சிதம்பரம் நகராட்சி கழிவுநீரை சுத்தி கரித்து நகராட்சிக்கு சொந்தமான புல் பண்ணை நிலத்தில் திருப்பி விட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சி.முட்லூர் ஊராட்சியை சிதம்பரம் தாலுகாவில் இணைப்பு குறித்து கிராம மக்களின் கருத்தை கேட்ட பின்பு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்த உடன்பாட்டை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக ஊராட்சி மன்றத் தலைவர் தெரிவித்தார்.