அம்மா உணவகங்களில் ஊழியர்கள் சம்பளம் குறைப்பு
சென்னை,ஏப்.18- சென்னையில் தற்போது 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு ரூ.140 கோடி செலவு ஏற்படுவதாகவும் இதில் ரூ.120 கோடி நட்டம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. 10 ஆண்டுகளில் மாநகராட்சிக்கு ரூ.1200 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. இதுகுறித்து அம்மா உணவக ஊழியர்கள் கூறியதாவது:- ஒரு அம்மா உணவகத்தில் இதுவரை 10 முதல் 12 பேர் வரை பணியாற்றினோம். தற்போது ஊழியர்களின் எண்ணிக்கை 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களுக்கு மாத சம்பளம் ரூ.9000 வழங்கப்பட்டு வந்தது. அது தற்போது ரூ.6000 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. தினசரி வருவாய் ரூ.2000 முதல் ரூ.2500 வரை இருக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். போதிய வருமானம் கிடைக்காத நேரத்தில் எங்களது சொந்த பணத்தை கொடுத்து இலக்கை அடைந்து வருகிறோம். இதனால் பலர் வேலையைவிட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அம்மா உணவகத்தின் நஷ்டத்தை தவிர்க்க புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.
காலமானார்
சென்னை,ஏப்.18- அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் சென்னை கோட்டம் 2 இன் தலைவர் வி.நாகலிங்கம் தாயார் ராணி காலமானார். அவருக்கு வயது 78. பொன்னேரி துர்கா நகரில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம், மாநில பொரு ளாளர் கே.தாமோதரன், கோட்டம் 2 செயலாளர் டி.கே. வெங்கடேசன், பொருளாளர் சி.கிருஷ்ணன், கோட்டம் 1 ன் தலைவர் எம்.ராஜேந்திரன், பொன்னேரி கிளை நிர்வாகி டி.சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொன்னேரி துர்கா நகரிலுள்ள மயானத்தில் செவ்வாயன்று (ஏப்.18) உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கார் மோதி பேருந்து ஓட்டுநர் பலி
மதுராந்தகம், ஏப்.18- கூவத்தூர் அடுத்த கடலூரை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது41). சென்னை மாநகர பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வந்தார். இவர் கல்பாக்கத்தில் இருந்து மோட்டார் சைக்கி ளில் கடலூர் நோக்கி சென்றார். வேப்பஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை யில் சென்றபோது கட்டுப் பாட்டை இழந்த அவர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் செல்லமுத்து மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
குளிர்சாதன பேருந்துகளில் சலுகை ரத்து
சென்னை,ஏப்.18- கோடை காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்கள் பலர் விடு முறையில் சொந்த ஊர்க ளுக்கு செல்வதும், சுற்றுலா தலங்களுக்கு போவதும் அதிகரித்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு தேவையான பேருந்துகளை இயக்கி வருகிறது. அரசு போக்குவரத்து கழக விரைவு பேருந்துகளில் உள்ள மொத்தம் 1,079 பேருந்துகளில் 1000 பேருந்து கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 79 மாற்று பேருந்துகளாக தயார் நிலையில் இருக்கும். 330 பேருந்துகள் குளிர்சாதன வசதியுடன் கழிப்பறை வசதி உடையவை. கோடை காலம் என்பதால் குளிர்சாதன பேருந்துகளில் பயணம் செய்யவே பலரும் விரும்பு கின்றனர். இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக ஏ.சி. பேருந்துகளில் ஏப்ரல் 15 முதல் 10விழுக்காடு கட்டணம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது.
மீன்பிடி தடைக்காலம்: இயக்குநர் எச்சரிக்கை
புதுச்சேரி, ஏப். 18- மீனவர்கள் மீன்பிடி தடைக்கால உத்தரவை மீறினால் நலத்திட்ட உதவிகள் ரத்து செய்யப்படும் என புதுவை மீன்வளத்துறை இயக்குநர் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலில் மீன்வளத்தை பாதுகாக்க புதுவையில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 15 ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கனகசெட்டிகுளம் முதல் புதுக்குப்பம் வரை பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழுவலைகள், இழுமடி வலைகள் கொண்டு விசைப்படகு மற்றும் எந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மீன்பிடி தடைக்கால உத்தரவை முறையாக கடைபிடிக்க வேண்டும். தடைகாலத்தில் எந்திரம் பொருத்தப்பட்ட பைபர் படகில் இழுவலைகள், இழுமடி வலைகளை பயன்படுத்துவதாக கண்டறியப் பட்டால் அவர்கள் மீது புதுவை கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு மீன்வளத் துறையின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி செல்லா குழந்தைகள்: கணக்கெடுப்பு தொடக்கம்
காஞ்சிபுரம்,ஏப்.18- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு களப்பணி ஏப்ரல் முதல் இரண்டு வாரங்களிலும் மற்றும் மே இறுதி வாரத்திலும் நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியில், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ) ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள், ஆகியோர் ஈடுபடுகின்றனர். எனவே கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்டஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பொது மக்கள் எவரேனும் பள்ளி செல்லா, இடை நின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தை கள் குறித்த விவரங்களை dpckanchi@Yahoo.co.in அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி
வேலூர், ஏப். 18- வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் தனுஷ் (25). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் செம்மலை, நிஜந்தன் ஆகிய 3 பேரும் திங்கட்கிழமை இரவு அப்துல்லா புரத்தில் சர்வீஸ் சாலையில் ஒரே பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். செம்மலை, நிரஞ்சன் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர் படுகாயம் அடைந்தவர் களை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.தனுஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மினி வேன் தீ வைத்து எரிப்பு
ஆம்பூர், ஏப். 18- ஆம்பூர் நகரம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (45). இவர் மினி வேனில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். வழக்கம் போல்,ஆம்பூர் - பேரணாம்பட்டு சாலையில் வேனை நிறுத்தி வைத்திருந்தார். செவ்வாய்க் கிழமை அதிகாலை 5 மணியளவில் மர்ம நபர்கள் வேனிற்கு தீ வைத்துள்ளனர். இதனால் வேன் முற்றிலும் எரிந்து சாம்பலானது. அதில் இருந்த பொருட்களும் தீயில் கருகியது. இதுகுறித்து கோவிந்தராஜ் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.