districts

ரூ. 7.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை, மார்ச் 6- சென்னை அருகே கண்டெய்னர் யார்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரு. 7.5 கோடி மதிப்பிலான 5 டன் செம்மரக் கட்டை களை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை அடுத்த புழலில், அம்பத்தூர் செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான லாரிகள் மற்றும் கண்டெய்னர் நிறுத்தும் யார்டு இயங்கி வருகிறது.  அந்த கிடங்கில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பி குமரனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.  அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் லாரி நிறுத்தும் யார்டில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் கேரள பதிவெண் கொண்ட லாரியில் சுமார் 5 டன் எடை கொண்ட முதல் தர செம்மரக் கட்டைகள் இருந்தது தெரிய வந்தது.  இதையடுத்து செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் அவற்றை புழல் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன் மதிப்பு சுமார் 7.5 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த செம்மரக்கட்டைகள் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டு கப்பல் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்த சரக்கு முனையத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த லாரி ஓட்டுநர், உரிமையாளர் யார் எனவும், இந்த கடத்தலில் லாரி யார்டின் உரிமையாளருக்கும் தொடர்புள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.