districts

img

தண்டுவடத்தை முறிக்கும் சாலைகள்: ஆலந்தூர் தொகுதி மக்கள் வேதனை

காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பஞ்சாயத்துகளையும் உள்ளடக்கியது ஆலந்தூர் தொகுதி. இந்த தொகுதிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை இல்லை. மணப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை பணி மந்தகதியில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் கடும் நெரிசலுக்கு ஆளாகியுள்ளனர். பல ஊராட்சி களில் மழைநீர்க் கால்வாய்கள் கூட இல்லாத நிலை உள்ளது; திறந்தவெளியில் கழிவுநீர் வெளியேறிக் கொண்டு  இருக்கிறது.  அடையாறு கரையோரம், அணுகுசாலைகள், சுடுகாடு போன்ற இடங்களில் குப்பைகளை கொட்டி உள்ளாட்சி அமைப்புகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகின்றன. வாகன ஓட்டிகளின் முதுகு தண்டுவடம் பாதிக்கும் அளவிற்கு உட்புறச்சாலைகள் சேதமடைந்துள்ளன. சமூக வளர்ச்சிக்கு ஏற்ப சுடுகாடுகள் நவீனப்படுத்தப்படாமல் கிடக்கிறது.

நாய்கடிக்கு மருந்துகள் இல்லை

பெரும்பாலான சுகாதார நிலையங்களில் நாய்கடி மருந்துகள் இல்லை. ஒருசில இடங்களில் நாய்கடி தடுப்பூசி மருந்துகள் இருந்தாலும், 5 பேர் கடிபட்டு வந்தால்தான் ஊசி போடும் நிலை உள்ளது. நங்கநல்லூர், இரண்டாம் கட்டளை உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதுபோன்று மக்கள் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏப்.28 அன்று நங்கநல்லூரில் கோரிக்கை பிரச்சாரக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அரிகிருஷ்ணன், ஆலந்தூர் பகுதிச் செயலாளர் ந.வெங் கடேசன் ஆகியோர் கூறுகையில், “இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தா.மோ. அன்பரசன், மாநில அமைச்சராகவும் உள்ளார். தொகுதி முழுவதும் உள்ள அடிப்படை பிரச்சனைகளை முன்னுரிமை கொடுத்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி அரசு கலைக்கல்லூரி ஒன்றை கொண்டு வர வேண்டும். உட்புறச்சாலைகளை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். 

டயாலிசிஸ் யூனிட் அமைக்க வேண்டும்

166வது வட்டத்திற்கு உட்பட்ட நங்கநல்லூர் மக்கள் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தை பிரதானமாக பயன்படுத்துகின்றனர். பயணிகள் படிகட்டுகளில் ஏறி ஜிஎஸ்டி சாலை பக்கமாக உள்ள அலுவலகத்தில் பயணச்சீட்டு வாங்க வேண்டி உள்ளது. அதன்பிறகு, மீண்டும் படிக்கட்டுகளில் ஏறி நடைமேடைக்கு வர வேண்டி உள்ளது. எனவே, பயணிகளின் சிரமத்தை தவிர்க்க படிக்கட்டு நடையின் மீது பயணச்சீட்டு அலுவலகத்தை அமைக்க வேண்டும்.

தண்ணீர் இல்லாத மயான பூமி

பக்தவச்சலம் நகரில் உள்ள மயானம் கன்டோன் மெண்ட் இடத்தில் உள்ளது. இதனால் மயானத்தில் பராமரிப்பு பணிகளை கூட செய்ய முடியவில்லை. தண்ணீர் வசதி கூட இன்றி உள்ளது. உடல்களை எரிக்க அனுமதி இல்லாததால், 4 கி.மீ.தூரம் உள்ள  பழவந்தாங்கலுக்கு உடல்களை கொண்டு செல்ல வேண்டி  உள்ளது. இந்த மயானத்தை சென்னை மாநகராட்சிக்கு ஒப்படைக்க கோரி ஒன்றிய பாதுகாப்புதுறை அமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தை மார்க்சிஸ்ட்  கட்சி நடத்தியது; மாநகராட்சிக்கும் மனு அளித்தது. எனவே, மாநகராட்சி துரிதமாக செயல்பட்டு, இடத்தை கையகப்படுத்தி, அந்த இடத்தில் மின்மயானம் அமைக்க வேண்டும்.

வேகத்தடை அமைக்கக் கோரிக்கை 

பழவந்தாங்கல், நங்கநல்லூர் என இருபகுதிகளுக்கும் ஒரே கிராம நிர்வாக அலுவலர் உள்ளார். இதனைமாற்றி, நங்கநல்லூரை மையப்படுத்தி தனியாக ஒருவரை நியமிக்க வேண்டும். தெருக்களில் கட்டிடக் கழிவுகள் கொட்டினால், கட்டுமான பொருட்களை வைத்தால் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் வசூலித்துவிட்டு, ரசீது வழங்காமல் முறைகேடு செய்வதை தடுக்க வேண்டும். இந்துகாலனி 2வது பிரதான சாலை - நேரு நெடுஞ்சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்து நிகழ்வதை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்.

நிறுத்தப்பட்ட சிற்றுந்தை இயக்குக

கீழ்க்கட்டளை - மீனம்பாக்கம் சுரங்கப்பாதை - தாம்பரத்திற்கு தடஎண் எஸ்-11 சிற்றுந்து இயக்கப்பட்டு வந்தது. அந்த பேருந்தை மூவரசம்பட்டு குளக்கரை - தாம்பரம் இடையே மீண்டும் இயக்க வேண்டும். மூவர சம்பட்டு - மீனம்பாக்கம் பிரதான சாலை, ரத்தினாபுரம் கெங்கையம்மன் கோவில் அருகே ஒரு காவல் சோதனை சாவடி (போலீஸ் பூத்) அமைக்க வேண்டும். 166வது வட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒரு துணை மின்நிலையம் அமைத்து, மின்னழுத்த குறைபாடு உள்ளிட்டவைகளை சரி செய்ய வேண்டும். எம்ஜிஆர் நெடுஞ்சாலை 5வது பிரதான சாலையில், பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக அடுத்தடுத்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்; இந்த பகுதியில் மாடுகள் வளர்ப்பதை முறைப்படுத்த வேண்டும். கே.கே.நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டயாலிசிஸ் யூனிட் ஒன்றை தொடங்க வேண்டும். மக்கள் சுபநிகழ்ச்சிகளை நடத்த ஏதுவாக சமூக நலக்கூடம் ஒன்றை அமைக்க வேண்டும்.

மூவரசம்பட்டு ஊராட்சி

சென்னைக்கு அருகே மூவரசம்பட்டு உள்ளது. இந்த ஊராட்சியில் சேரும் குப்பைகளை கொட்டும் கிடங்கு ஏரியையொட்டி உள்ளது. அவ்வப்போது கிடங்கு நிரம்பி, சாலையிலும், ஏரிகளிலும் குப்பை வழிகிறது. மழைக்காலங்களில் குப்பை கழிவுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை ஏரியில் கலக்கிறது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, இவற்றை தடுக்க நடவடிக்கை வேண்டும். 3 நாளைக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதை மாற்றி தினசரி ஊராட்சியே குடிநீர் வழங்க வேண்டும். பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள சுடுகாட்டை மின் மயானமாக மாற்ற வேண்டும். உட்புறச்சாலைகளை செப்பனிடுவதோடு, தெருக்களில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் அதிகளவு பயன்படுத்துகின்றனர். இங்கு மகப்பேறு பார்க்கப்படுகிறது. எனவே, சுகாதார நிலையத்தின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தி, தரம் உயர்த்த வேண்டும்.

சீரமைக்கப்படுமா பேருந்து நிலையம்?

167வது வட்டத்தில் உள்ள நங்கநல்லூர் பேருந்து நிலையம் போதிய பராமரிப்பின்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒருபுறம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இரவு நேரங்களில் குடிகாரர்களின் புகலிடமாக மாறிவிடுகிறது; பகல் நேரங்களில் கூட மக்கள் செல்ல அச்சப்படும் இடமாக மாறியுள்ளது. இங்குள்ள இ-டாய்லெட் பயன்பாடற்று கிடக்கிறது. பேருந்து நிலையத்திற்கு வாயிற் கதவுகள் கூட இல்லை. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தை மாநகராட்சி மேம்படுத்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மணப்பாக்கம்

157வது வட்டத்திற்குட்பட்ட மணப்பாக்கம் - கெருகம்பாக்கம் செல்லும் மகாத்மா காந்தி சாலை  முழுவதும் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டுள் ளது. பணி முடித்த இடங்களில் சாலையை முழுமை யாக சீரமைக்க வேண்டும். பள்ளிகள் தொடங்கும் முன்பு  எஞ்சியப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மணப்பாக்கம் தர்மராஜபுரம் பகுதியில் காசாகிராண்ட் நிறுவனம் 3 தொகுப்புகளாக அடுக்குமாடி குடியிருப்பு களை கட்டியுள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு பொதுப் பாதை அமைக்க, மாநகராட்சிக்கு இடம் தானமாக கொடுத்து விட்டது. பொதுப்பாதையில் மாநகராட்சி தார்ச்சாலை அமைக்காமல் உள்ளது. தனியார் நிறுவனமே இலவச மாக தார்ச்சாலை அமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி தர மறுக்கின்றனர்.

ஊராட்சிகள்

தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் கோவூர்-தண்டலம் இடையிலான அணுகுசாலையில் (சர்வீஸ்ரோடு) தரப்பாக்கம், தண்டலம், கோவூர் ஆகிய ஊராட்சிகளில் சேரும் குப்பைகளை கொட்டுகின்றனர். லாரிகளில் கொண்டு வந்து கழிவுநீர் திறந்து  விடுகின்றனர். இதேபோன்று கொளப்பாக்கம் ஊராட்சியில்  சேரும் குப்பைகளை அடையாற்றில் கொட்டுகின்றனர். இவற்றை தடுக்க வேண்டும். கொளப்பாக்கம் - கவுல்பஜாரை இணைக்கும் சாலையை சீரமைத்து, மழைநீர் கால்வாய் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். போரூர் - குன்றத்தூர் சாலையை செப்பனிடும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இரண்டாம் கட்டளை ஊராட்சியில், ஒரே கடையில் 1200 குடும்ப அட்டைகள் உள்ளது. 800 கார்டுக்கு ஒரு கடை என்ற அரசின் கொள்கை முடிவை அமல்படுத்த வேண்டும். பரணிபுத்தூர்-ஐயப்பன் தாங்கல் இடைய உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். தண்டலம் ஊராட்சி குளத்தை சீரமைத்து நடைபாதையுடன் கூடியதாக மேம்படுத்த வேண்டும். இங்குள்ள மைதானத்தில் ஒரு உடற்பயிற்சி கூடமும், பேருந்து நிறுத்தத்தில் ஒரு நிழற்குடையும் அமைக்க வேண்டும். தண்டலம் - கோவூர் சாலையை செப்பனிட வேண்டும். ஊராட்சி முழுவதும் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.