திருவண்ணாமலை, ஜன.21- திருவண்ணாமலை மலையை சுற்றி ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் பல்லாண்டு காலமாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் யானை ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் மலையைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். அதன் அடிப்படையில், மலையடிவார ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்புகளை குறித்து கணக் கெடுக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை (ஜன.21) அரசு அலுவலர்கள் ஈடுபட்டனர். இதனால் அச்சமடைந்த அப்பகுதி பொது மக்கள், கணக்கெடுக்கும் பணியை கைவிட கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.