ராணிப்பேட்டை, ஜூலை 1 -
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தலைமையில் சமீபத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் துறை சார்ந்த அதிகாரிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எல்சி. மணி, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள நிவாரணத் தொகையை விடுவிக்க வேண்டும், தமிழக அரசு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்தை பாதிக்கும் சக்கரமல்லூர் பகுதியில் இரண்டாவது முறையாக அமைய உள்ள மணல் குவாரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும், பாலாற்றில் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எல்சி. மணி, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் வளர்மதி மணல் குவாரி அமைப்பது தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிட்டார். பாலாற்றின் தண்ணீரின் தரம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டார்.