districts

img

பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் செங்கொடி! - ஜி.ராஜேந்திரன்

விழுப்புரம் மாவட்டத்தில் 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு ரியல் எஸ்டேட் தொழில் உள்ளே புகுந்ததால் விவசாய நிலங்கள் வீட்டு மனை நிலங்களாக மாறின. சிறிதளவு நிலம் வைத்திருந்த விவசாயிகளும், விவசாய வேலையை நம்பியிருந்த தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். விவசாயம் செய்த நிலத்தை இழந்து கட்டுமானம் போன்ற வேலைகளைத் தேடிச் செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். கல் உடைப்போர் வாழ்வில் ஒளியேற்றிய செங்கொடி மாவட்டத்தின் மிகப்பெரிய வட்டாரமான வானூரில், திருவக்கரை மற்றும் எறையூர் கிராமங்களில் தனியார் கல்குவாரி, கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வேலை செய்வதற்காக சேலம் மாவட்டத்திலிருந்து 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிபெயர்ந்து வந்தன. தங்குவதற்கு இடமின்றி, திருவக்கரை கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தில் தற்காலிக குடிசைகளை அமைத்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல் உடைக்கும் தொழில் செய்து வந்தனர். முன்னறிவிப்பின்றி அரசு அதிகாரிகள் மின் இணைப்பைத் துண்டித்து, குடிசைகளை இடிக்க முயன்றபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர் போராட்டங்களின் விளைவாக, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டதில், குடிசை இடிப்பு முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் அந்த நிலத்திற்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.

மனித உரிமை மீறலுக்கு எதிரான போர்

திருவக்கரை கல்குவாரியில் வெள்ளையன் என்ற தொழிலாளி மீது சம்மட்டி திருட்டு என்ற பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி, கல்குவாரி உரிமையாளர் கட்டிப்போட்டு அடித்து, மனிதத்தன்மையற்ற முறையில் துன்புறுத்தினார். 2012 ஆம் ஆண்டில் நடந்த இந்த கொடூரத்தை கண்டித்து மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தது சிபிஎம். நியாயத்தின் வெற்றி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வானூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடத்தப்பட்ட அமைதியான போராட்டத்தின்போது, காவல்துறை உதவி ஆய்வாளர் தன்னை கீழே தள்ளி இடுப்பெலும்பு முறிந்ததாக கூறி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு தோழர்களுக்காக திண்டிவனம் நீதிமன்றத்தில் பார் கவுன்சில் உறுப்பினர் ஏ.கோதண்டம் வாதாடி விடுதலை பெற்றுத் தந்தார்.

நிலம் மீட்பும் நீதி காப்பும்

பொம்மையார்பாளையம் கிராமத்தில் மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் நிலத்தில் வசித்த சுமார் 1000 குடும்பங்களை அப்புறப்படுத்த 2023ல் முயற்சி நடந்தபோது, கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடத்தப்பட்ட பேரணியில் மூத்த தலைவர் ஆர்.ராமமூர்த்தி உள்ளிட்ட தலைவர்களும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சென்ட் நிலம் கூட சொந்தமில்லாத ஏழைகள் என்பது நிரூபிக்கப்பட்டு, அனைவருக்கும் நில உரிமை பெற்றுத் தரப்பட்டது. எடச்சேரி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வந்த அரசு புஞ்சை நிலத்தில் இடைத்தரகர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளின் துணையுடன் போலி பத்திரம் மூலம் 100 விவசாயிகளை வெளியேற்ற முயன்றபோது, கட்சியின் தொடர் போராட்டத்தால் போலி பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, விவசாயிகளின் உரிமை காக்கப்பட்டது. கனிம வளப்பாதுகாப்பு திண்டிவனம் வட்டத்தில் உள்ள மயிலம் ஒன்றியம் கூட்டேரிப்பட்டு ஏரியில் நெடுஞ்சாலை பாலப் பணிக்காக அரசு அனுமதித்த அளவை மீறி மண் கொள்ளையடித்த செயலை எதிர்த்து போராடி, விவசாயிகளின் நலனைக் காத்தது செங்கொடி இயக்கம்.

சமூக நீதிக்கான செயல்பாடுகள்

மயிலம் ஒன்றியம் வீடூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களில் பாதி பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டபோது, கட்சியின் தொடர் போராட்டங்களின் விளைவாக 2023ல் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. ஊழல் எதிர்ப்புப் போராட்டம் மயிலம் ஒன்றியம் சோழிய சொற்குளம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லத் திட்டப் பணிக்காக வட்டாட்சியர் அனுமதியுடன் மண் எடுத்த விவசாயிகளிடம் காவல் ஆய்வாளர் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில், கட்சியின் தலையீட்டால் பணம் திரும்பப் பெறப்பட்டதுடன், குற்றம் புரிந்த அதிகாரி உடனடியாக ஆயுதப்படைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். முடிவுரை கடந்த மூன்று ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில் எழுந்த பல்வேறு பிரச்சனைகளில் முதன்முதலாக களமிறங்கி போராடியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பட்டியலின மக்கள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் செங்கொடி இயக்கத்தின் மாநில மாநாடு முதன்முதலாக விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.