சிதம்பரம், பிப்.1- திருமுட்டம் அருகே அரசுப் பள்ளிக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தின் எதிரொலியாக நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், திருமுட்டம் வட்டத்திற்குட்பட்டது சாத்தாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளிக்கு சொந்தமான மந்த வெளி புறம் போக்கு 2.5 ஏக்கர் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த இடத்தை மீட்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமூக நல அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆக்கிரமிப்பை அகற்ற நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜன 31 அன்று சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து, திருமுட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சேகர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சேத்தியாதோப்பு டிஎஸ்பி விஜயகுமார், திருமுட்டம் காவல் துறை ஆய்வாளர் வீரசேகரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேன்மொழி, பிரகாஷ், திருமுட்டம் வட்டச் செயலாளர் தினேஷ்பாபு, வட்ட குழு உறுப்பினர்கள் வெற்றி வீரன், பாண்டுரங்கன், சுப்பிரமணியன், குமாரி, , தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் ஆதிமூலம், கிளை செயலாளர் முருகன், ராமு, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை முடிவில், தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசுக்கு சொந்தமான மந்தைவெளி புறம்போக்கு நிலத்தை 45 நாட்களுக்குள் மீட்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.