சென்னை, பிப்.28- அரிதான நோய்களை ஆரம்பத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் குழந்தைகளை காப்பாற்றலாம் என்று சென்னை சின்னமலையில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துமனையின் பொது குழந்தைகள் மருத்துவம் மற்றும் குழந்தைகளுக்கான வளர்ச்சிதை பாதிப்பு துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் கணேஷ் கூறினார். அரிதான நோய்தினத்தை முன்னிட்டு சென்னையில் திங்களன்று (பிப்.28) நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகம் முழுவதும் 30கோடிப்பேர் அரிதான நோயால் பாதிக்கப்பட்டுள்ளளனர்.இந்த நோய் 72 விழுக்காடு மரபணு சார்ந்தவை. அரிதான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுள் 3-ல் 2 பங்குக்கும் அதிகமானவர்கள் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அரிதான நோய்களால் பாதிப்பு என்பது நிச்சயமற்ற தன்மையோடு வாழ்க்கையை நடத்துவதாக உள்ளது. அரிதான நோய்களை கையாள்வதில் மருத்துவத்துறை எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் ஏரளாமாக உள்ளன. பொதுமக்கள் மத்தியிலும் மருத்துவ பணியாளர்கள் மத்தியிலும் அரிதான நோய்கள் குறித்த குறைந்த விழிப்புணர்வே இருப்பது முக்கியமான சவாலாகும். தாமதிக்கப்பட்ட சிகிச்சை அல்லது தவறான நோயினை உறுதி செய்தால் என்பது கேடு விளைவிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். பிறந்த குழந்தைகள் சரியாக பால் குடிக்காவிட்டாலும் சோர்வுடன் காணப்பட்டாலும் மருத்துவரிடம் காட்டுவது அவசியம். மேலும் சரியான நேரத்தில் குறைபாட்டை கண்டறிந்தால் விரைந்து சிகிச்சை அளித்து குழந்தையை பாதுகாக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக அரிதான நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோரிடம் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கலந்துரையாடினார்.