புதுச்சேரி, ஆக.17- புதுச்சேரி அரசு சார்பில் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு தேநீர் விருந்து அளிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, தியாகிகளுக்கு சால்வை அணிவித்து, பரிசுப் பொருள்களை வழங்கி பேசினார். அப்போது, “ தியாகிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்”என்றும் அறிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, அரசுச் செயலர் பத்மா ஜெய்ஸ்வால், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் (பொறுப்பு) கலியபெருமாள், துறை அதிகாரிகள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.