districts

img

சேக்காடு ரயில்வே சுரங்கப்பாலப் பணி

அம்பத்தூர், நவ. 15- ஆவடி அருகே சேக்காடு பகுதி யில்  ஆமை வேகத்தில் நடைபெறும் ரயில்வே சுரங்கப்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் ஆவடி அருகே சேக்காடு பகுதியில் 'எண் - 9' ரயில்வே கேட்டை மாற்றி, ரயில்வே சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும் என சேக்காடு மற்றும் கோபாலபுரம் உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் விளைவாக, தென்னக ரயில்வே நிர்வாகம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேக்காடு பகுதியில் ரயில்வே சுரங்கப் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரயில்வே சுரங்கப் பாலம் அமைக்கும் பணி, கடந்த 2006 - 2007ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது.

ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் சேக்காடு ரயில்வே சுரங்கப்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் ரூ. 20.58 கோடி திட்ட மதிப்பில், தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் சுமார் ரூ.9 கோடி மதிப்பில் 1,312.3 அடி நீளத்திற்கு, 13 அடி அகலம், 16 அடி உயரம் கொண்ட, இரு வழிப்பாதையுடன் கூடிய ரயில்வே சுரங்கப்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. ஆனால் அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே அந்த பணியை துரிதமாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இரு சக்கர வாகனம், கார், வேன் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் கடந்து சென்று வரும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இந்த பணி, கடந்த  மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் சேக்காடு, கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 ஆயிரம் பேர் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறை, சேக்காடு ரயில்வே சுரங்கப் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.