கடலூர், ஜன. 24- அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை யில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து கடலூரில் நடைபெறுவதாக இருந்த அனைத்து கட்சிகளின் ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ரயில்வே முதுநிலை இயக்குதல் மேலாளர் அரிக்குமார், கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, டிஎஸ்பி கரிக்கால் பாரிசங்கர், ரயில்வே ஆய்வாளர் அருண் வினோத் குமார் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், வி.சி.க. கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், நகர செயலாளர் செந்தில், குடியிருப்போர் சங்க பொது செயலாளர் மருதவாணன், தலைவர் வெங்கடேசன், சிபிஎம் மாநகரச் செயலாளர் அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர் பக்கிரான்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் குளோப், நகரச் செயலாளர் நாகராஜ், மக்கள் அதிகாரம் மாவட்டச் செயலாளர் பாலு, கடலூர் மாநகர அனைத்து பொதுநல அமைப்பு தலைவர் ரவி, நிர்வாகி குரு ராமலிங்கம், மீனவர் பேரவை சுப்பராயன், கடலூர் அனைத்து பொதுநல சங்க தலைவர் திருவரசு, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் தேவநாதன், பாலு, பச்சையப்பன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மாவட்டத் தலைநகரமான கடலூரில், கொரானா பொதுமுடக்கத்திற்கு பிறகு திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற மன்னார்குடி, காரைக்கால் விரைவு ரயில்கள் தற்போது நிற்பதில்லை. இதனால் இரவு நேரத்தில் சென்னை செல்லும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே மீண்டும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், திருப்பதி செல்லும் ரயிலும் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கன்னியாகுமரி புதுச்சேரி மஹால் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. விழுப்புரம், தாம்பரம் பயணிகள் ரயில், விருத்தாசலம் சேலம் பயணிகள் ரயில் இரண்டும் கடலூர் துறைமுக சந்திப்பு வரை நீட்டிக்கவும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் திருப்பாப்புலியூர், கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பிற கோரிக்கைகள் குறித்து ரயில்வே வாரியத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனையடுத்து, செவ்வாயன்று (ஜன. 24) நடைபெற இருந்த ரயில் மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக நிர்வாகி கள் தெரிவித்தனர்.