திருப்பத்தூர், மார்ச்12- திருப்புத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை முத்தானூர் மலை கிராமத்தில் பொது மக்கள் மீது பொய் வழக்குப் போட்டு துன்புறுத்தும் காவல்துறை அதிகாரிகளை கண்டித்து சாராட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஜவ்வாது மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் லஷ்மண ராஜா தலைமை வகித்து பேசியதாவது:- ஏலகிரி மலை முத்தானூரில் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வருகிறோம். 100 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா இடத்திலும் அரசு புறம்போக்கு நிலத்திலும் விவசாயம் செய்து வருகிறோம். அரசுக்கு முறையாக வரியும் செலுத்த வருகிறோம். குடிநீர் தொட்டி, தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் அரசு நிர்வாகம் செய்துகொடுத்திருக்கிறது. ஆனால், வனத்துறையும் காவல்துறையினரும் எங்கள் மக்கள் மீது பொய் வழக்குப் போட்டு தொந்தரவு செய்து வருகின்றனர். அந்த பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டியும், பட்டா வழங்காமல் காலதாமதம் செய்து வரும் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்தும் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். இவ்வாறு அவர் பேசினார். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு, துணைத் தலைவர் ஏ.வி. சண்முகம், விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். சக்திவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.