districts

img

கிழக்கு கல்லறை சாலை குடியிருப்பு கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்திடுக: சிபிஎம் மனு

சென்னை, அக். 22- குடியிருப்பு கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளுக்கு விரைந்து வழங்க வேண்டும் என கிழக்கு கல்லறை சாலை திட்ட பகுதி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் டி.வெங்கட், பொருளாளர் எல்.மோகன், நிர்வாகிகள் எம்.அண்ணாமலை, வி.குப்புசாமி ஆகியோர் வாரிய உதவி செயற்பொறியாளரை சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில், ராயபுரம் கிழக்கு கல்லறை சாலை திட்டப் பகுதியில் 46 ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்புகளில் 928 வீடுகளில் குடியிருந்த மக்களை காலி செய்து ஒரு வருடங்களுக்கு மேலாகியும், தற்போது தான் இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கட்டுமான பணியில் உடனடி யாக தலையிட்டு துரிதப்படுத்தி பயனாளிகளுக்கு விரைந்து குடி யிருப்புகளை ஒதுக்க வேண்டும். மேலும் எத்தனை அடுக்குமாடி, எவ்வளவு குடியிருப்புகள், மொத்த பட்ஜெட் எவ்வளவு என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் விளம்பர பலகையை அங்கே வைக்க வேண்டும். அடுக்குமாடி குடி யிருப்புகளில் 40க்கும் மேற்பட்டோ ருக்கு காசோலையும், 15க்கும் மேற்பட்ட வீடுகளின் நகல் அலார்ட் மெண்ட் உடனே வழங்க வேண்டும். குடிசைப்பகுதி மக்கள் கணக்கெடுப்பின்படி 340க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 250 பேருக்கு மட்டும் குடியிருந்ததற்கான ஆதாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 90க்கும் மேற்பட்டோருக்கும் குடியிருப்பதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும். குடிசைப்பகுதி மக்களுக்கு மாற்று இடமாக கிழக்கு கல்லறை சாலை திட்டப் பகுதியில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குறைந்த கட்டணத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.